முனைவர் அரங்க மல்லிகா
தமிழ் மரபு அறக்கட்டளை முனைவர் தேமொழி எழுதிய பௌத்தம் சார்ந்த ஓர் ஆய்வு நூலை வெளியிட்டிருக்கிறது. முனைவர் தேமொழி ஓர் ஆய்வாளராகக் காய்தல் உவத்தலின்றி இந்நூலில் புத்தர் காலத்தினுடைய குறிப்புகளை, வரலாற்றை இலக்கியம் தொடங்கி தமிழகத்தில் புத்தருடைய சிலைகள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு மீளாய்வு செய்திருக்கிறார். இது ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டிருக்கிறது.
முதல் இயல்— புத்தரின் திருவுருவத் தோற்றம்
இரண்டாவது இயல்— தமிழ்நாட்டுப் பௌத்தச் சிற்பங்கள்
மூன்றாவது இயல்— முக்கோற்பகவர்
நான்காவது இயல்— புத்த தத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்
ஐந்தாவது இயல்— எண்குணத்தான்
ஆகிய தலைப்புகளில் பௌத்தத்தின் மீளாய்வாகத் தமிழகத்தில் புத்த தத்துவம் இருந்ததினுடைய வரலாற்றையும் வேர் அழித்ததினுடைய வரலாற்றையும் அருமையாகப் பதிவு செய்திருக்கிறார்.
புத்தரின் திருவுருவத் தோற்றம்:
புத்தருடைய திருவுருவத் தோற்றம் என்ற இயலானது தமிழகத்தில் எங்கெல்லாம் புத்தருடைய சிலைகள் கண்டெடுக்கப்பட்டனவோ அவற்றை மையமாகக் கொண்டு அவர் அந்தக் கட்டுரையை எழுதியுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் பௌத்தம் இருந்ததா? என்ற ஒரு கேள்வியை முன்வைத்து அவருடைய ஆய்வு தொடங்குகிறது. இந்தியாவில் பிறந்தாலும் கூட இலங்கை கிழக்கு ஆசிய நாடுகளுக்கு புத்தம் பரவி இருக்கிறது என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் செப்பேடு சான்றுகளுடன் புத்தருடைய சிலைகள் மூலமாக விரிவான ஆய்வை அவர் இந்தக் கட்டுரையில் எழுதி இருக்கிறார். கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து ஆறாம் நூற்றாண்டு வரை பௌத்தம் தமிழகத்தில் இருந்தது என்பதற்கான அனைத்து ஆவணங்களையும் அவர் காட்சிப்படுத்தியிருக்கிறார். மிக அழகாகச் சொல்லி இருக்கிறார்.
உருவத் தோற்றம் என்ற ஒன்றின் மூலமாக புத்தரின் கொடை பௌத்தம் என்பதை உறுதிப்படுத்துகிறார்.
தொடக்கக் காலத்தில் புத்தர்கள் பற்றிய செய்திகளை அறிய சாஞ்சி ஸ்தூபியைச் சுட்டிக்காட்டுகிறார். இந்தக் கட்டுரையில் நான்கு முக்கியமான விடயங்களை புத்தர் சார்ந்து எழுதுகிறார்.
1. புத்தரின் பிறப்பு; புத்தரின் பிறப்பைக் குறிக்கும் இடம் லும்பினி என்ற அந்த இடத்திற்கான வரைபடத்தைக் காட்டியிருக்கிறார் .
2. புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெறக்கூடிய காட்சி; போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெறுவது என்பது ஞானம் பெறுவதற்கான அடையாளத்தைக் காட்டக்கூடிய படச்சிற்பம் காட்டப்பட்டிருக்கிறது.
3. அவர் நிகழ்த்திய முதல் உரை. ஐந்து சீடர்கள் அவர் முன் அமர்ந்து கேட்பதைப் போல ஒரு வரைபடம் காட்டப்பட்டிருக்கிறது. சாரநாத் வரைபடம்.
4. பரிநிர்வாணம் சொல்லப்பட்டு இருக்கிறது. படுத்த நிலையில் மூடிய கண்கள் சற்றே திறந்தபடி இருக்க வலது கையைத் தலைக்கு அடியில் கொடுத்தவாறு இடது கையை இயல்பாக உடலில் வைத்த வாரும் காட்டப்பட்டிருக்கிறார்.
சிற்பங்கள் முழு உருவச் சிற்பங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் என இருவகையாக இருப்பதைக் கொண்டு அவர் இதை எல்லாம் சொல்லி இருக்கிறார். குறியீடுகளாக புத்தருடைய பிறப்பைச் சொல்லும் போது அவருடைய பிச்சை ஏற்பதைக் குறிக்கக்கூடிய திருவோடும் ஒரு குறியீடாகக் காட்டப்பட்டு இருக்கிறது.
பாதச்சுவடுகள் என்பது புத்தரின் வனவாசத்தைக் குறிக்கிறது. போதி மரக் குறியீடாக ஞானம் பெறுதலைக் குறிக்கிறது. பரிநிர்வாணம் என்பது ஸ்தூபி குறியீடாக நாம் புரிந்து கொள்ளுகிறோம். இப்படி குறியீட்டின் மூலமாக எவ்வாறு புத்தர் அறியப்படுகிறார் என்பதை விளக்கும் இந்த முதல் கட்டுரை மிக அற்புதமான ஓர் ஆய்வுக் கட்டுரையாக அமைந்திருக்கிறது.
இதில் இரண்டு இடங்களைக் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். ஒன்று கந்தகார்; பாகிஸ்தானுடைய வடமேற்குப் பகுதியாக இருக்கிறது. மேற்கே இந்துகுஷ் மலை இருக்கிறது. கிழக்கே சிந்து ஆறு ஓடுகிறது. வடக்கே உலகில் கூரை பாமீர் பீடபூமி, இமயத்தின் எல்லையாகக் கொண்டுள்ளதை அவர் குறிப்பிட்டுச் சொல்லுகிறார். இங்கு மாவீரர் அலெக்ஸாண்டரின் ஆட்சிக் காலம் இருந்திருக்கிறது. அலெக்ஸாண்டர் ஆட்சி செய்த இந்த இடங்களை சந்திரகுப்த மௌரியர் (பொ.ஆ.மு.305-303) கைப்பற்றுகிறார்.
சந்திரகுப்த மௌரியரின் பேரன் அசோகர் புத்தசமயத்தை கல்வெட்டின் மூலம் (பொ.ஆ.மு259) நிறுவுகிறார். இது பௌத்தத்தின் திருப்புமுனை. பௌத்தம் இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம். அதனால் புத்தர் உருவங்கள் காந்தாரப் புத்த சிற்ப வகைகளை ஒத்திருக்கும் என்று ஆனந்த குமாரசாமி கூறுவதை நினைவுபடுத்துகிறார். காந்தாரச் சிற்பங்களில் பொது ஆண்டு ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து தான் புத்தரின் உருவங்கள் கிடைக்கப்பெறுகின்றன. காந்தாரத்தின் கிரேக்க பௌத்தக் கலை (Greco- Buddhist Art) அல்லது ஹெல்னிஸ்டிக் கலை(Helenistic Art) கிரேக்கக் கலை பாணிகளில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற புத்த வடிவங்களைக் காந்தாரப்பகுதியில் காண முடிகிறது என்று விளக்குகிறார். இதுதொடர்பான புத்தர் தொல்லியல் தடயங்களைப் பதிவுசெய்கிறார். கனிஷ்கருடைய முயற்சியினால் புத்த சமயம் தேரவாத பௌத்தம் மகாயானப் பௌத்தம் என்ற இரண்டு பிரிவாகப் பார்க்கப்படுகிறது. மகாயானப் பௌத்தம் கனிஷ்கரால் வளர்த்தெடுக்கப் படுகிறது.
புத்தரின் உருவங்கள் முழு உருவச் சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்கள் என இரண்டாகப் பார்க்கப்படுகின்றன. புத்தரின் தலைக்குப் பின்புறம் ஒளி வட்டமும், ஞானம் பெற்றவர் என்பதைக் குறிக்கும் ஞான முடிச்சும், இரு புருவங்களின் இடையில் சிறிய வட்டத் திலகமும் கொண்டையைச் சுற்றிலும் வலப்புறம் சுருண்டு இருக்கும் சிறுசிறு சுருள்களாக முடியும் , அரச வாழ்வு காலத்தில் காதுகளில் தொங்கிய கனமான குழைகளால் துளைகொண்டு நீண்டு தொங்கும் காதுகளையும், அமைதி தவழும் முகத்துடன் மென்மையான சற்றே திறந்த விழிகளால் புன்சிரிப்புடன் அருளுடன் நோக்குமாக புத்தர் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். எப்போதும் துறவாடை அணிந்த நிலையிலேயே காட்டப்படும் புத்தர் அமர்ந்த நிலையிலோ நின்ற நிலையிலோ படுத்த நிலையிலோ காட்சிப்படுத்தப்படுவர்.
இன்றைக்கு இருக்கக்கூடிய இந்துக் கடவுள்கள் குறிப்பாக அவதாரத்துடன் காட்சிப்படுத்தப்படும் கடவுள் சிற்பங்களை நாம் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது புத்தருடைய தோற்றம்தான் சைவ வைணவத்தினால் மாற்றம் பெற்று இருக்கிறது என்பதை உணரமுடியும்.
தமிழ் மரபு அறக்கட்டளைச் சொற்பொழிவு:
"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு
— முனைவர் அரங்க மல்லிகா
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு –
திசைக்கூடல் – 345 [நவம்பர் 26, 2023]
https://youtu.be/QnP-IR4RS5A
நூல்: தமிழகத்தில் பௌத்தம்
ஆசிரியர்: தேமொழி
விலை:₹120
வெளியீடு: 2023
பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை
கிடைக்குமிடம்:
https://www.commonfolks.in/books/d/tamilagathil-bautham