Sunday, October 30, 2022

புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 2



புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 2

க.சுபாஷிணி


நூலாசிரியர்: ஆ.பத்மாவதி


வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

நேற்று நூல் பற்றிய பொதுவான தகவல்களை வழங்கியிருந்தேன். இனி தொடர்ந்து அதன் அத்தியாயங்கள் ஒவ்வொன்று பற்றியும் சிறு அறிமுகமாகக் காண்போம்.

இந்த நூலின் முதல் அத்தியாயம் களப்பிரர் என்பவர் யார்? அவர்கள் ஆட்சி செய்த காலம், களப்பிரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் போன்ற தரவுகள்  எத்தகைய மூலச்சான்றுகளில் கிடைக்கப்பெற்றுள்ளன என்ற தகவல்களை வழங்குகின்றது. அந்த வகையில், இன்றைக்கு இதுவரை நமக்குக் கிடைத்துள்ளவற்றுள் களப்பிரர் பற்றிய  மூலச் சான்றுகளுள் மிகப் பழமையானதாக, புத்ததத்தர் என்ற பௌத்த தேரர் எழுதிய வினய விநிச்சயம் என்ற நூலையும், பூலாங்குறிச்சி கல்வெட்டையும் நூலாசிரியர் முனைவர். ஆ.பத்மாவதி குறிப்பிடுகின்றார்.


பூலாங்குறிச்சி கல்வெட்டுகள் என்பன  இன்றைய தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள,  திருப்பத்தூர் பேரூராட்சிக்கு அண்மையில் உள்ள பூலாங்குறிச்சி என்ற ஊராட்சியில் உள்ள பூலாங்குறிச்சி குன்றின் சரிவுப் பகுதியில் அமைந்துள்ளன.  இக்கல்வெட்டுகள் 1979ஆம் ஆண்டில்  கல்வெட்டு ஆய்வாளர் ஆசிரியர் கரு.ராஜேந்திரன் அவர்களால் கண்டறியப்பட்டன. களப்பிர மன்னர்கள் ஆட்சி காலத்தில் அவர்களது ஆட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம் போன்றவை பற்றிய தகவல்களை இக்கல்வெட்டுகள் வழங்குகின்றன. 


பாண்டியர் காலத்து வேள்விக்குடி செப்பேடு மற்றும் தளவாய்புறச் செப்பேடு கூறும் களப்பிரர் பற்றிய செய்திகள், பல்லவர் காலத்து முப்பது செப்பேடுகள், சாளுக்கியர் காலத்து செப்பேடுகள் போன்றவற்றையும், இலக்கியச் சான்றுகளாகத் திருத்தொண்டர் திருவந்தாதி கூறும் மூர்த்தி நாயனார், கூற்றுவ நாயனார் புராணங்களோடு வருகின்ற சில செய்திகளையும், கல்லாடம், யாப்பெருங்கலும் போன்ற இலக்கியங்களையும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.


இத்தகைய மூலச் சான்றுகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், இலக்கியங்கள் கூறும் செய்திகளின் அடிப்படையில் களப்பிரர்கள் இன்றைய கர்நாடக பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பதும், பாண்டிய மன்னர்களால் சங்ககாலத்தில் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்ட பிரம்மதேய நிலங்களை மீட்டவர்கள் என்ற செய்தியையும், சேர சோழ பாண்டிய மன்னர்களை வென்று அவர்களுடைய சின்னங்களை தமது சின்னங்களாகக் கொண்டிருந்தனர் என்றும் அவர்கள் பௌத்த, சமண சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற வகையிலும் களப்பிரர் கால நிலையின் அடிப்படையை நூலாசிரியர் முதல் அத்தியாயத்தில் விவரிக்கின்றார்.


இந்த நூலின் இரண்டாவது அத்தியாயம் களப்பிரர் காலம் பற்றியும், களப்பிரர்கள் பற்றியும், அவர்களது பூர்வீகம் பற்றியும் பல்வேறு வரலாற்று அறிஞர்கள் எழுதிய கருத்துக்களை ஆய்வு செய்வதாக அமைகிறது.


தமிழக வரலாற்று ஆய்வறிஞர்களான சதாசிவ பண்டாரத்தார், மு. ராகவ ஐயங்கார், மயிலை சீனி வேங்கடசாமி. க.ப. அறவாணன், பி. ஜி. எல். சுவாமி, சி.மீனாட்சி, இரா. பன்னீர்செல்வம்,   மா. இராசமாணிக்கனார், பா. மாசிலாமணி, ந. சுப்பிரமணியன், கிருஷ்ணசாமி ஐயங்கார், கே. கே. பிள்ளை, நடன காசிநாதன், பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் இன்னும் சில ஆய்வாளர்களின் நூல்கள், கட்டுரைகள், அறிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்து அவர்களது கருத்துக்களை அலசும் வகையில் இந்த அத்தியாயத்தை நூலாசிரியர் ஆ.பத்மாவதி அமைத்திருக்கின்றார்.


வரலாற்றறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் களப்பிரர் சைன மதத்தையும் பௌத்த மதத்தையும் ஆதரித்தவர்கள் என்பதையும், இவர்கள் இன்றைய கர்நாடகத்தைச் சேர்ந்த கோலாரில் உள்ள நந்தி மலை பகுதியைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்பதையும், ஆய்வாளர் க.ப.அறவாணன் களப்பிரர்கள் தமிழர்களே என்றும், அவர்கள் பிராமணர்களையும் பிராமணர்களின் யாகங்களை எதிர்த்து புரட்சி செய்தவர்கள் என்று  கூறுவதைச் சுட்டிக்காட்டுகிறார். ஆய்வாளர் மா. ராஜமாணிக்கனார், ’தமிழக வரலாறு’ என்னும் தனது நூலில் களப்பிறர் ஆட்சி செய்த காலம் பல்வேறு குழப்பங்கள் நிறைந்த காலமாகியதால் அதாவது கிபி 300 இருந்து கிபி 575 வரை, ’தமிழகத்து வரலாற்றின் இருண்டு காலம்’ எனக் கூறுவதையும் குறிப்பிடுகின்றார். 


இதற்கு பதிலளிக்கும் வகையில் பொற்கோ அவர்கள்,  ’களப்பிரர் தமிழர் அல்லர் என்றும் அவர்கள் காலம் இருண்ட காலம் என்று கூறுவதும் சரியல்ல. களப்பிரர் காலம் தமிழர் ஆட்சி செய்த காலம்தான்; ஒளியுள்ள காலம் தான்; அது பதினென்கீழ்கணக்கு போன்ற நூல்கள் தோன்றிய காலம்  தான்’,  என்று கூறுவதையும் நூலாசிரியர் சுட்டிக் காட்டுகின்றார். 


களப்பிரர்கள் தமிழர்கள் தானா அல்லது வேங்கடத்திற்கும் இன்றைய தமிழ்நாட்டின் எல்லைக்கும் இடைப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த வடுகர்களா அல்லது கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களா அல்லது முத்தரையர்கள் என குறிப்பிடப்படுபவர்களா என்ற பல்வேறு கருத்துக்களும் இந்த அத்தியாயத்தில் அலசப்படுகிறன.

நூலாசிரியர் இந்த ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ள ஏராளமான நூல்கள், வரலாற்று ஆய்வாலர்களுக்குத் தமிழக வரலாற்றின் பல்வேறு பார்வைகளை வழங்கக்கூடியவை.  

தொடரும்..!


-சுபா

--------------

நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு

நூலாசிரியர்: ஆ.பத்மாவதி

வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்


No comments:

Post a Comment