Saturday, October 29, 2022

புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் திறனாய்வு - 1



-முனைவர் க.சுபாஷிணி


களப்பிரர் காலம் இருண்ட காலம் எனத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் நீண்ட காலமாகக் கூறி வருவதை நாம் வாசித்தும் கேட்டும் அறிந்துள்ளோம். நான் மலேசிய சூழலில் தமிழ் மொழி பற்றிய வரலாறு, தமிழக வரலாறு என வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் கூட கிபி 2ஆம் நூற்றாண்டு அதாவது, சங்கம் மருவிய காலம் முதல் பல்லவர் காலம் வரை இருண்ட காலம் என தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுவதை  அப்போது தமிழ் கற்றபோது படித்தது இப்போதும் நினைவுக்கு வருகிறது.

களப்பிரர் காலம் என்பது இருண்டு காலம் என்றால் அது யாருக்கு இருண்ட காலம் என்ற கேள்வியும் கூடவே எழுகிறது; ஆயினும் பெரும்பாலும் இதனை நாம் யோசிப்பதில்லை. இந்த கேள்வியை எழுப்ப வேண்டியதும் ஆராய வேண்டியதும் அவசியம் அல்லவா? 


சேர, சோழ, பாண்டியர், பல்லவர், நாயக்கர் கால வரலாற்றை அறிந்து கொள்ள இன்று நமக்குக் கிடைக்கின்ற பல்வேறு கல்வெட்டுகள், செப்பேடுகள், காசுகள் அல்லது ஏதாவது தொல்லியல் தடயங்கள், களப்பிரர் வரலாறு கூறும் வகையில் கிடைக்குமா என்பது பல வரலாற்று ஆசிரியர்களுக்கு இருந்த ஒரு ஏக்கமாகவும் இருந்தது எனலாம். களப்பிரர் காலம் பற்றி விவரிக்கும் ஆய்வு நூல்கள் சில வெளிவந்துள்ளன. அவை களப்பிரர் பற்றிய சில தகவல்களை வழங்கினாலும் ஓரிரு நூல்கள் பொருந்தாத பல தகவல்களை வழங்கி குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்கின என்பதை மறுக்க முடியாது. 


இத்தகைய சூழலில், முழுமையான தொல்லியல் மற்றும் வரலாற்று ஆதாரங்கள், இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, தமிழக தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணியாற்றி பணி ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வுகளை நிகழ்த்தி வரும் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் எழுதி, மிக நீண்ட காலமாக வெளிவரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு  செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்திருக்கும் நூல் ’புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு’ என்ற இந்த நூல்.


2010ஆம் ஆண்டு செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது  நானும் மாநாட்டில் ஆய்வுக் கட்டுரைகள் வாசிக்கவும் அமர்வுகளுக்குத் தலைமையேற்கவும் அழைக்கப்பட்டிருந்தேன். அந்தச் சூழலில் முனைவர். பத்மாவதி அவர்களோடு உரையாடிக் கொண்டிருக்கும் போது இந்தக் களப்பிரர் கால ஆய்வுகள் பற்றி மிகுந்த ஆர்வத்துடனும் அவருக்கே உரித்தான எக்ஸைட்மண்ட் குறையாமலும் 🙂 என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.  


அதற்கு மறு ஆண்டு சென்னையில் மீண்டும் சந்தித்த போது  அவரை விளக்கச் சொல்லி களப்பிரர் கால வரலாறு பற்றிய  சில ஒலிப்பதிவுகளைச் செய்திருந்தேன். அப்பதிவுகளைத் தமிழ் மரபு அறக்கட்டளை ‘மன்ணின் குரல்’ வெளியீடாக அப்போது வெளியீடு செய்திருந்தேன்.  http://voiceofthf.blogspot.com/2012/02/blog-post.html

2021ஆம் ஆண்டு இறுதியில் அவரது ஆய்வு நூல் வடிவில் வெளிவந்தது.  களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள அடிப்படையை வழங்கும் நூலாக இந்த நூல் அமைந்திருக்கின்றது.


இந்த நூலின் அத்தியாயங்கள் பேசும் சில செய்திகளைச் சிறு பதிவுகளாக அடுத்த சில நாட்களுக்கு வாசகர்களுக்கு அறிமுகம் செய்யலாம் எனக் கருதுகிறேன்.  

இதுவரை இந்த நூலை வாங்கவில்லை என்றால் இன்றே வாங்கிக் கொள்ளுங்கள்!

தொடரும்..!

--------------

நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு

நூலாசிரியர்: ஆ.பத்மாவதி

வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்


-சுபா


No comments:

Post a Comment