Saturday, November 25, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும் - 7

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 7

கண்ணகி வழிபாடு சிங்கள பண்பாட்டில் பின்னிப்பிணைந்து இருப்பது போல முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு வழிபாடாக அமைகிறது முருகன் வழிபாடு. தமிழர்கள் அறுபடை வீடுகளில் ஒன்றாகக் குறிப்பிடும் கதிர்காமக் கந்தன் சிங்களவர்களது 'கதரகமத் தெய்யோ' என்று வழிபடும் ஒரு கடவுளாகவும் அமைகிறார். சிங்கள பண்பாட்டில் முருகன் வழிபாடு - தமிழ் மரபின் தாக்கமும் சிங்கள மரபின் விரிவாக்கமும், என்ற பொருளில் இந்த நூலின் ஏழாவது அத்தியாயம் அமைகிறது.

இலங்கையின் மூன்று பூர்வகுடிகள் முருகனைத் தங்களது கடவுளாகச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.

1. சிங்கள பௌத்தர்கள் 

2. இலங்கை தமிழர்கள்

3. இலங்கை வேடர்கள்

நூலின் இந்த இயலில் சில முக்கிய நூல்கள் ஆய்வுக்குப் பயன்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு B.Paffenberger , எழுதிய The Kataragama pilgrimage Hindu Buddha's interaction and its significance in Sri Lanka polyethnic social system, 1979, என் டி ராகவன் ஆய்வில் வெளிவந்த India in Ceylonese history: Society and culture 1969 மற்றும் பேராசிரியர் என் சண்முகலிங்கன் எழுதிய கதிர்காம முருகன் சமூக மானிடவியல் தரிசனம் 2014, பேராசிரியர் டெஸ்மணட் மல்லிகாரச்சி எழுதிய சிங்கள பௌத்த வர்த்தகர்களின் உடல்மொழி 2003, ஆகிய நூல்களை நூலாசிரியர் பல இடங்களில் சான்று குறிப்பிடுகின்றார்.

இவர்கள் மட்டுமன்றி இலங்கை இஸ்லாமியர்களும் கதிர்காம கடவுளை வணங்குகின்றனர் என்பதும் ஒரு கூடுதல் தகவலாக அமைகிறது.

இலங்கைத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் ஊவா மாகாணத்தின் புத்தளம் பகுதியில் இருக்கின்ற 'தியனகம' என்ற பெயர் கொண்ட காட்டின் நடுவில் அமைந்திருக்கின்றது கதிர்காமம்.

சிங்கள பௌத்தர்களைப் பொருத்தவரை,

1. சிங்கள பௌத்தர்களது தொன்மையான குடியேற்றங்களில் ஒன்று கதிர்காமம்.

2. அங்கிருக்கும் அரசமரம் தேவநம்பியதீசன் அநுராதபுரத்திலிருந்த  அரசமரத்திலிருந்து கொண்டுவந்து நட்ட கிளை என மகாவம்சம் குறிப்பிடுகிறது.

3. மரபுவழி சிங்கள இலக்கியமான `கந்த உபாத` எனும் இலக்கியம் தமிழ் அரசனான எல்லாளனை வெற்றி கொண்டதால் நேர்த்திக்கடனாக துட்டகைமுனு என்ற அரசன் கட்டியது இந்த ஆலயம் என்கிறது.

4. மகாசேனன் என்ற சிங்கள மன்னனின் மறுபிறப்பு கதிர்காமக் கந்தன் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இதன் அடிப்படையை வைத்து இன்று வரை பௌத்தமத ஆலய பரிபாலன சட்டத்தின் கீழ் கதிர்காமம் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை சிங்களவர் வருகைக்கு முன்னரே கதிர்காம முருகன் தமிழர்களின் கடவுளாகக் கொள்ளப்படுகின்றார். துட்டகைமுனு அதனை ஒரு சிங்களவர் ஆலயமாக மாற்றி அமைத்திருக்கக் கூடும் என்றே தமிழர்கள  கருதுகின்றனர்.  குறிஞ்சி நிலத்துக்கு உரிய கடவுளான திருமுருகனின் கோயில் இது என்றும், சமஸ்கிருத தொடர்பின்றி மக்கள் வழிபாடு செய்யும் வகையில் இந்தக் கோயில் அமைந்தஇருக்கின்றது என்பதும் தொல்காப்பியம் குறிக்கும் `கந்தழி` வழிபாடு இது என்றும் குறிப்பிடலாம் என மு.கணபதிப்பிள்ளை (1967) குறிப்பிடுவது இங்கு ஒப்பிட வேண்டியிருக்கிறது.

வேடர்களைப் பொருத்தவரை,  வள்ளி தமது தமக்கையாகவும் கந்தன் தனது மைத்துனனாகவும் பலர் நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள். அக்காவை மணமுடித்த கந்தனுக்கு வருடந்தோறும் எடுக்கப்படும் பெருவிழாவில் கலந்து கொள்வது நமது கடமை என வேடர்கள் ஒவ்வொருவரும் நம்புகின்றார்கள். வேடர் குலத் தலைவன் மகள் வள்ளியை களவு மணம் புரிந்த இடமாகக் கதிர்காமத்தை இலங்கை வேடர் சமூகம் நம்புகின்றது. சூரனைத் தாக்கிக் கொன்ற பின்னர் வள்ளியை மணம் புரிய வந்த இடம் இதுவே என நம்புகின்றார்கள்.  கதிர்காமத்திறகு மேற்கே 3 மைல் தொலைவில் மாணிக்ககங்கை நதிக்கரையில் செல்லக்கதிர்காமம் அமைந்திருக்கின்றது. இங்கு ஒரு பிள்ளையார் கோயிலும் இருக்கின்றது.  முருகனின் வேண்டுகோளின்படி யானையாக பிள்ளையார் தோன்றி வள்ளி திருமணத்திற்கு உதவினார் என்ற புராண கதையும் வேடர்கள் வழக்கில் இருக்கின்றது.

இலங்கை தமிழர்களின் வாழ்வியலில் தமிழர் கடவுளாகவே கதிர்காம கடவுள் கருதப்படுகின்றார். கதிர்காமத்தில் மிக நீண்ட காலமாகவே முருகனுக்கு நைவேத்தியமாக மான் இறைச்சி படைக்கப்பட்டு வந்தது. 1960 களுக்குப் பிறகு கதிர்காமத்தைப் புனித நகரமாக இலங்கை அரசு பிரகடனப்படுத்திய பிறகு மான் இறைச்சி படைப்பது நிறுத்தப்பட்டது என நூலாசிரியர் கூறுவது கவனத்திற்கொள்ளப்பட வேண்டியது. ஆக மான் இறைச்சி முருகக் கடவுளுக்குப் படைத்த பண்பாட்டு கூறுகளைக் காணும்போது பழங்குடி சமூகத்தின் வழிபாட்டு மரபை உணர்த்துவதாக அமைகிறது.

கதிர்காமத்தைப் போலவே கண்டியிலும் இருக்கும் கதரகமா கோயில் இலங்கை சிங்களவர் பண்பாட்டில் முக்கியத்துவம் பெறும் ஒரு கோயிலாக அமைகிறது. அதிலும் குறிப்பாக சிங்கள வணிகர்கள் இந்த முருகன் கோயிலை தங்களது வழிபாட்டின் முக்கிய அங்கமாக கருதுகின்றனர். சிங்கள வணிகர்கள் ஒவ்வொரு நாளும் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்வதை தங்கள் மரபாகவும் கொண்டிருக்கின்றனர். சிங்கள மக்களின் முருக வழிபாட்டு முறையில் உடலில் சிறிய இரும்பு முட்கள் மற்றும் ஆணிகளைத் துளைத்து வேண்டுதல் வழிபாடு செய்வது வழக்கில் இருப்பதை ஓபயசேகர (1988) அவர்களது ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. கதிர்காமத்தில் தூக்குக் காவடி எடுக்கும் இஸ்லாமியர்களும் இத்தகைய வழிபாட்டில் இணைந்து கொள்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை கதிர்காமம் மற்றும் கண்டி கதிரகமத் தெய்யோ என்ற வடிவில் முருகவழிபாடு தென்னிந்திய பண்பாட்டு நீட்சியாகத் தொடர்கிறது.

தொடரும்..

-சுபா

குறிப்பு: கதிர்காமம் தொடர்பாக கூறப்பட்டுள்ள செய்திகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் அல்லது தவறாக இணைக்கப்பட்டிருந்தால் நண்பர்கள் அதனை எனக்கு தெரிவித்து உதவலாம்.

புகைப்படம் - கதிர்காமம், ஊவா மாநில காட்டுப் பகுதி, இலங்கை வேடர்கள்.





No comments:

Post a Comment