Friday, November 24, 2023

இலங்கையில் சிங்களவர்-இந்திய இன தொடர்ச்சியும் தென்னிந்திய பண்பாட்டு நீட்சியும் - 6

 


நூல் திறனாய்வு

நூலாசிரியர்: பக்தவத்சல பாரதி

திறனாய்வு:முனைவர்.க.சுபாஷிணி

பகுதி 6

வரலாற்றுக் காலத்தின் தொடக்கம் முதலே தாய் தெய்வ வழிபாடு என்பது உலக மக்களின் அனைத்து சமூகங்களிலும் ஏதோ ஒரு வகையில் வெளிப்படுவதை இன்றைய தொல்லியல் அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. தமிழகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது தொன்மையான வழிபாட்டுக் கூறுகளில் ஒன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் கண்ணகிக்குத் தமிழகத்தில் கோயில்கள் இருக்கின்றன. தமிழகத்திற்கு அருகிலுள்ள இலங்கையில் கண்ணகி எப்படி வழிபடப்படுகிறாள் என்பதைத்தான் நூலில் ஆறாவது அத்தியாயம் பேசுகிறது.

நூலாசிரியர் ஆய்வாளர்கள் சிலரது ஆய்வுகளை இந்தப் பகுதிக்கு முக்கியச் சான்றுகளாகப் பயன்படுத்துகின்றார். அதில்,பேராசிரியர் ஒபயசேகர எழுதிய The cult of the Goddess Pattini (1984),  பேராசிரியர் ரிச்சர்ட் கொம்ரிட்ச் எழுதிய, Food for 7 Grandmothers: Stages in the universalisation of the Sinhalese ritual, (1971), லூத்மினா மீர்வொர்த்-லெவினா எழுதிய The Hindu goddess Pattini in the Buddhist popular belief in Ceylon (1916), L.S.Hiatt எழுதிய The Pattini cult of Ceyon Tamil Perspective (1973) ஆகியவை வெகுவாக இந்தப் பகுதியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை மட்டுமன்றி மேலும் பல நூல்களையும் இந்தப் பகுதியில் நூலாசிரியர் அறிமுகப்படுத்துகிறார். அவை அனைத்தும் கண்ணகி சிங்களப் பண்பாட்டில் வகிக்கும் முக்கியத்துவம் பற்றி நமக்கு வியப்பூட்டும் வகையில் உள்ள சிங்கள இலக்கியங்களாக அமைகின்றன.

கஜபாகு மன்னன் இலங்கையில் நிலவி வந்த பஞ்சத்தைப் போக்குவதற்கு தமிழகம் சென்று கண்ணகி சிலையைக் கொண்டுவந்து ஆடி மாதத்தில் விழா எடுத்தான், என இதன் பூர்வீகத்தை ஒரு மரபு பேசுகிறது. இந்த கஜபாகு பொ.ஆ 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தவன்.

பொ.ஆ.மு. 3ம் நூற்றாண்டில் பௌத்தம் முழுமையாக இலங்கையில் பரவத் தொடங்குவதற்கு முன்பு இலங்கைத் தீவு முழுக்க நாட்டார் வழிபாட்டு மரபு தெய்வங்கள் மக்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தன. அவற்றுள் நாக வழிபாடு, இயற்கை வழிபாடு என்பதோடு கண்ணகி வழிபாடும், ஏழு பெண் தெய்வங்களின் வழிபாடும்,  'கிரி அம்மா' என்ற பெண் தெய்வ வழிபாடும் அடங்குகிறது.

சிங்களவரின் பௌத்த மத அடையாளத்துக்குக் குறைவில்லாத வகையில் சிங்கள பண்பாட்டில் கண்ணகி தெய்வம் 'கண்ணகி தெய்யோ' அல்லது 'பத்தினி தெய்யோ' எனச் சிறப்பிக்கப்படுகிறார். அடிப்படையில் கடவுள் கோட்பாட்டை மறுக்கும் பவுத்தம் இலங்கையைப் பொறுத்த வகையில் கண்ணகி தெய்வத்தையும் மற்றும் தமிழ் நிலத்தில் நன்கு பரிச்சயமான விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் ஆகிய நான்கு தெய்வங்களையும் உள்ளடக்கிய தெய்வீக மரபைக் கொண்டிருப்பதையும் காண்கிறோம். இலங்கை பௌத்தம் தேரவாத பௌத்த சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் கூட தாய் தெய்வ வழிபாடு இங்கு கண்ணகி வழிபாடாக முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கண்ணகி தொன்மத்தை மூன்று வெவ்வேறு வகையில் குறிப்பிடுகின்றார்கள்.

1. நாக தெய்வமான நாக அரசனின் கண்ணீரில் இருந்து பிறந்தவள்

2. நீலத்தாமரையில் இருந்து தோன்றியவள்

3. பாண்டிய மன்னனின் தோட்டத்து மாமரத்திலிருந்து பிறந்தவள்

மேற்கூறிய மூன்று தொன்மங்களுமே கண்ணகியின் பிறப்பை அசாதாரண நிகழ்வாகக் காட்டுகின்றன. 

சிங்கள மக்களின் வழிபாட்டு மரபில் கண்ணகி தெய்யோவைப் பன்முகத்தன்மை கொண்ட கடவுளாக வழிபடுகின்றனர்.

1. கண்ணகி வளமைக்கும் ஆரோக்கியத்திற்குமான தெய்வம்.

2. கண்ணகி பௌத்த மதத்தைக் காத்து வரும் தெய்வம்

3. கண்ணகி இலங்கைத்தீவைக் காக்கும் காவல் தெய்வம்

கண்ணகி வழிபாட்டிற்கு முன்னர் ஏழு பெண் தெய்வங்கள் வழிபாடு என்பதும் சிங்களவர் மரபில் முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக அமைந்துள்ளது. இது தமிழ்நில மரபில் உள்ள சப்த கன்னியர் அல்லது ஏழு கன்னிமார் என்ற வழிபாட்டு மரபோடு ஒப்பீடு செய்யத் தக்கது.

நூலாசிரியர் சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு ஆகிய தெய்வங்களைக் குறிப்பிடும் போது நூலில் `இந்து தெய்வங்கள்` எனக் குறிப்பிடுகின்றார்.  `இந்து மதம்; என்ற ஒரு அடையாளப்படுத்துதல்  ஆங்கிலேய காலணித்துவ காலத்தில் உருவாக்கப்பட்ட ஒரு வழக்கம் என்பதன் அடிப்படையில் நூலாசிரியர் இதனைப் `பண்டைய தென்னிந்திய தொல் தெய்வ வழிபாடுகள்` எனச் சுட்டுவது பொறுந்தும் என்று கருதுகிறேன்.   லிங்க வழிபாடும்  இவ்வகையில் தொல்  தெய்வ வழிபாடு என்ற வகையிலே சுட்டப்பட வேண்டும்.  

கண்ணகியைச் சிங்களவர்கள் ஒரு தொன்மையான பௌத்த தெய்வமாகவே கருதுகிறார்கள். ஏறமல பத்தினி தெய்வம் புத்தர் நட்ட மாவித்தில் இருந்து தோன்றியவள் என சிங்கள நூல்கள் குறிப்பிடுகின்றன. ஒரு கட்டத்தில் மைத்திரி புத்தர் வடிவில் கண்ணகியை இனம் காணவும் சிங்களவர் முற்பட்டனர். அடுத்த கட்டத்தில் பத்தினி தெய்வமான கண்ணகி போதிசத்துவர் எனும் நிலையிலிருந்து பரிநிர்வாண நிலைக்கு உயர்த்தப்பட்டார். இத்தகைய மேலும் பல தொன்மங்கள் கண்ணகியைப் பௌத்த சமயத்துடன் பின்னிப் பிணைத்துக் காட்டுவதை தீவிரமாக முயற்சித்துள்ளன.

சிங்கள மக்களைப் பொறுத்தவரை கண்ணகி தமிழ் தெய்வம் அல்ல; மாறாக சிங்கள பௌத்தர்களுக்கே உரிய  முக்கிய தெய்வம்.இன்று இலங்கை முழுவதும் கண்ணகிக்குப் பல கோயில்கள் உள்ளன.

இன்று கண்ணகி தெய்யோ சிங்களவர் பண்பாட்டில் பிரிக்கப்பட முடியாத முக்கிய இடத்தை ஏற்றிருக்கும் ஒரு தெய்வம் என்பது வியப்பளிக்கும் உண்மை.

தொடரும்..

-சுபா





No comments:

Post a Comment