Monday, May 29, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

கும்பகோணம் ஜம்புலிங்கம்



முனைவர் தேமொழி எழுதியுள்ள தமிழகத்தில் பௌத்தம் என்னும் நூல் ஐந்து தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது.

புத்தரின் திருவுருவத் தோற்றம் (பக்.14-33),  தமிழ்நாட்டுப் பௌத்த சிற்பங்கள் (பக்.34-44) என்ற தலைப்பின்கீழ் உள்ள கட்டுரைகளில் கலையியல் நோக்கில் புத்தரின் சிற்பங்களைப் பற்றியும், சிலைகளைப் பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது. முக்கோற்பவர் (பக்.45-59) கட்டுரை முக்கோற்பவர் பற்றிய அறிமுகத்தைத் தருகிறது. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக்குறிப்புகள் (பக்.60-79) என்ற கட்டுரை தமிழக வரலாற்றை அறிவதில் அளிக்கும் பங்கினை அளிக்கிறது. எண்குணத்தான் (பக்.60-91) எண்வகைப்பட்ட குணங்களை பலவித சான்றுகளுடன் அணுகுகிறது.  இந்நூலிலிருந்து சில பகுதிகளைக் காண்போம்.


"தொடக்க கால இந்தியக்கலையில் (பொ.ஆ.ஒன்றாம் நூற்றாண்டிற்கு முன்) புத்தர் மனித வடிவில் சித்தரிக்கப்படவில்லை. குறியீடுகளாக மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளார்." (ப.14) "கனிஷ்கர் காலத்தில்தான் மகாயான புத்த சமயத்தில் உருவ வழிபாடு தோன்றுகிறது....புத்தரின் முதல் சிற்பம் கனிஷ்கர் காலத்தில் உருவாக்கப்பட்டது." (ப.23)  "சிந்து சமவெளிக்கு அப்பால் வளர்ந்த காந்தார புத்த சிற்பங்களுக்கு இணையாகவே கங்கைச்சமவெளி அருகில் மதுராவிலும் புத்த சிற்பங்கள் உருவாயின."(ப.25) "மதுரா வடிவங்களிலிருந்து ஐந்தாம் நூற்றாண்டு வாக்கில் வளர்ச்சியின் உச்சக்கட்டமாக குப்த வடிவங்கள் தோன்றிப் பின்னர் குப்த வடிவமே அஜந்தா எல்லோரா, அமராவதி நாகார்ஜுனகொண்டா, காஞ்சி நாகப்பட்டினம் என இந்தியாவின் பிற பகுதிகளிலும் கிழக்கு ஆசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள்.... உள்ளிட்ட நாடுகளில் உருவான வடிவங்களுக்கும் அடித்தளமாக அமைந்தன." (ப.27)


"தமிழறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் நூல் (1940) முதற்கொண்டு தொடர்ந்து பல பௌத்த ஆய்வாளர்கள் குறிப்பிட்ட புத்தர் சிலைகள் வரை யாவற்றையும் தொகுத்து சென்ற நூற்றாண்டின் இறுதியில் வெளியிடப்பட்ட தமிழ்நாட்டு வரலாறு சோழப்பெருவேந்தர் காலம் என்ற நூலில் பட்டியலிடப்பட்டுள்ளது."(ப.34) "சில புத்தர் சிலைகள் குறிப்பாக அரியலூர் மாவட்டத்தின் கீழக்கொளத்தூர், அரியலூர்.. ஆகிய இடங்களில் கிடைத்த புத்தர் சிற்பங்கள் கங்கைகொண்டசோழபுரம் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டாலும் பெரம்பலூர் புத்தர் சிலைகள் பல பொதுவெளியில் பாதுகாப்பின்றி உள்ளன என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கவலை."(ப.42)


"கலித்தொகையில் முக்கோற்பவர் குறித்து விவரிக்கும் பாடல் ஒன்று உண்டு."(ப.45) "முக்கோல் குறித்துத் தமிழின் தொன்மையான நூலை எழுதிய தொல்காப்பியரும் அந்தணர்க்குரியவை எவை என்பதைக் குறிப்பிடுகையில் ஒரு நூற்பாவில் சுட்டுகிறார்."(ப.48) "தொல்காப்பியம் குறிப்பிடுவது போல அந்தணர்கள்/துறவிகள் முக்கோல் ஏந்துவர் என்பது வழக்கம்." (ப.52) "துறவிகள் அவ்வாறு முக்கோல் அமைப்பைத் தங்களுடன் எடுத்துச்சென்ற நோக்கம் என்ன என்பதற்கான சான்றுகள் சிற்பங்களிலோ ஓவியங்களிலோ கிடைத்ததாகத் தெரியவில்லை, அதாவது பௌத்த சிற்பங்களைத் தவிர."(ப.54)


"விநயவிநிச்சயம் என்ற நூலின் முடிவுரையில் புத்ததத்தர் அந்த நூலை அவர் பூதமங்கலத்தில் தங்கியிருந்தபொழுது எழுதியதாகக் குறிப்பிடுகிறார்."(ப.64) "ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தபுத்ததத்தர் அவர் காலத்தில் தமிழகம் முழுவதும் ஆண்டதாகக் களப்பிர மன்னன் என அச்சுத விக்கந்தனைக் குறிப்பிடுகிறார்."(ப.67) "புத்ததத்தர் காலமான ஐந்தாம் நூற்றாண்டில் காவிரிப்பூம்பட்டினம் சிறப்புற்று விளங்கியதையும் அதன் பின்னரே கடல்கோளால் கொள்ளப்பட்டதாக மணிமேகலையின் பதிவு காட்டுவதாகவும் கணிக்கலாம்."(ப.70)


"எண்குணத்தான் என்ற பொருள் குறித்து மட்டும் அறியமுற்படுவது இக்கட்டுரையின் நோக்கம்."(ப.80) "...எட்டு பண்புகளைக் கொண்டவரும் துறவியுமான புத்தர் எண்குணத்தான் என அழைக்கப்படுவதற்குப் பொருத்தமானவர்."(ப.90) "திருக்குறள் முதல் அதிகாரத்தின் பத்து குறள்கள் காட்டும் பண்புகள், குறிப்பாக எண்குணத்தான் என்பது புத்தரை குறிக்கப்படும் ஒரு விளக்கமாகத் தரப்பட்டால், அந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்பதுடன் மிகப்பொருத்தமானதாக இருக்கும்."(ப.90)


ஒட்டுமொத்த நூலையும் வாசிக்கும்போது முழுமையாக பல புதிய செய்திகளைக் காணலாம்.  நூலாசிரியர் பல இடங்களில் என் ஆய்வினை மேற்கோளாகச் சுட்டியுள்ளதைக் காணமுடிந்தது. உரிய இடங்களில் ஒளிப்படங்களும், மேற்கோள் சான்றுகளும் தரப்பட்டுள்ளன.


தமிழகத்தில் பௌத்தம் என்பதை பல்வேறு பொருண்மைகளில் நோக்குகின்ற நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருக்கும், பதிப்பித்த தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பிற்கும் என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.


நூல் : தமிழகத்தில் பௌத்தம்

ஆசிரியர் : முனைவர் தேமொழி

பதிப்பகம்: தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு

பதிப்பாண்டு: முதல் பதிப்பு, மே 2023

விலை ரூ.120, ஐரோப்பாவில் யூரோ 4

நூலை இணையம் வழி பெற :

https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation


சோழ நாட்டில் பௌத்தம் தளத்தில் வாசிக்க:

https://ponnibuddha.blogspot.com/2023/05/blog-post_29.html

Wednesday, May 24, 2023

திருகோணமலை செருவவிலா மங்கள ராஜ விகாரை



திருகோணமலை செருவவிலா மங்கள ராஜ விகாரை - இது இலங்கையில் இருக்கின்ற 17 புனித பௌத்த விகாரங்களில் ஒன்று. புத்தரின் நெற்றிப் பகுதி எலும்பின் சிறு பகுதி பாதுகாக்கப்படும் புனிதப் பகுதியாக இது கருதப்படுகின்றது.

கிமு 2ஆம் நூற்றாண்டு காலகட்டத்தின் கட்டுமானம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வளாகத்தில் பண்டைய சிதலம் அடைந்த பகுதிகளும் காணப்படுகின்றன. அவற்றிற்கிடையே புதிய கட்டுமானங்கள் அழகாக அமைந்திருக்கின்றன.
அருகாமையிலேயே ஒரு அருங்காட்சியகம் உள்ளது. அதில் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட அரும் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.















Tuesday, May 16, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் திறனாய்வு

முனைவர் நா. கண்ணன்



டாக்டர் தேமொழி எழுதியுள்ள "தமிழகத்தில் பௌத்தம்" எனும் நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக சனி, மே 14, 2023 ல் வெளியீடு கண்டது.

1. புத்தரின் திருவுருவத்தோற்றம்

2. தமிழ் நாட்டு பௌத்த சிற்பங்கள்

3. முக்கோற்பகவர்

4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

5. எண் குணத்தான்

எனும் ஐந்து அத்தியாயங்கள் கொண்டது இப்புத்தகம்.


பௌத்தம் தொன்மையானது, வடநாட்டிலிருந்து மௌரிய அரசர் அசோகர் காலத்தில் (கிமு 3) தெற்கே வந்தது. எனவே பௌத்த போதனைகளை பாலி மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்து பின் தமிழ் சுயமாக இது பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது.


அலெக்ஸாண்டர் படையெடுப்பின் விளைவாக பௌத்தம் முதலில் காந்தாரம் (பாகிஸ்தான், ஆஃப்கான்) செல்கிறது. பாக்டீரியா எனும் பகுதியில் கிடைத்த சிற்பங்களே புத்தரின் முதல் உருவச்சிற்பங்களாகும். அவை கிரேக்கச் சிலைகளின் கலை வடிவில் இருக்கும். பின் பரவிய வெவ்வேறு பிரதேசங்களின் தன்மையை புத்தர் சிற்பங்கள் கொள்கின்றன. மீசை வைத்த புத்தர் சிலை தமிழகத்தில் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது. மீசை ஆண்மையின் குறியீடு. ரவி வர்மா கூட சிவனுக்கு மீசை வைத்து அழகு பார்க்கிறார்.  தமிழ் நாட்டில் மொத்தம் 70 புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன அறிகிறோம். பெரும்பாலும் அவை மகத நாடு என அறியப்படும் ஆறகளூர் (சேலம்)  பகுதியாகும். அங்குதான் பௌத்த எழுச்சி மாநாடு நடந்தது.


இப்புத்தகத்தின் முக்கிய பங்களிப்பு முக்கோர்பகவர் யார்? பகவான் யார்? அந்தணர் யார்? எனும் கேள்விகளுக்கான பதில்கள். பௌத்த சந்நியாசிகள் தங்கள் சிறு உடைமைகளை வைக்க மூன்று கோல்கள் கொண்ட ஒரு உண்டியை உருவாக்குவார்களாம். அதுவே இந்த முக்கோல். இதற்கு எந்த தத்துவப்பின்னணியும் கிடையாது என்பது டாக்டர் தேமொழியின் கண்டுபிடிப்பு. மேலும், பகவர், பகவன் எனும் சொற்கள் புத்த பகவானைக் குறிக்க வந்தவையே தவிர இந்துத் தெய்வங்களையோ, அடியார்களையோ குறிக்க வந்தவை அல்ல என்றும் விளக்குகிறார் தேமொழி.


திருக்குறள் சொல்லும் அறவாழி அந்தணன் என்பது பௌத்த துறவிகளைச் சுட்ட வந்த சொல் என்கிறார் தேமொழி. வ.உ.சி அவர்கள் திருக்குறள் பாயிரம் அனைத்தும் துறவிகளின் புகழ் பாடுபவையேயன்றி இறைவனுக்கான பாடல்கள் அல்ல என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுகிறார் தேமொழி  இந்நூலில்.


இதன் அடிப்படையில் முக்கோல் பௌத்த பிக்குகளுக்கு அன்று கொடுக்கப்பட்டது. இனிமேல் தமிழ் பௌத்த பிக்குகள் முன் போல் முக்கோர் பகவர் ஆவர் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் டோல்னா பையே சௌகர்யம் என பிக்குகள் செல்வதும், சிலர் பேக்பேக் வைத்துக் கொண்டு இலகுவாகச் செல்வதும் காணக்கிடைக்கிறது. நான் ஜப்பானில், கொரியாவில், தாய்லாந்தில், தைவானில் பார்த்த புத்த பிக்குகள் ரொம்ப மாடர்ன். அவர்களுக்கு முக்கோல் தேவைப்படாது.


இந்து சந்நியாசிகளும் கோல் தாங்குகின்றனர். அது தத்துவத்தின் பாற்பட்டது. சர்வம் ஏகம் எனும் அத்வைத சந்நியாசிகள் ஒரு கோல், இறைவன்-அடியார் எனப்பட்டது உலகம் எனும் மாத்வ சந்நியாசிகள் இரண்டு கோல்களைத் தாங்குகின்றனர். இராமானுஜர் போன்ற விசிட்டாத்துவ சந்நியாசிகள் சித், அசித், ஈஸ்வரன் எனும் மூன்று உண்மைகளைச் சுட்ட மூன்று கோல்கள் தாங்குகின்றனர். It has no utility value and is only symbolic.

சங்கம் மருவிய காலத்தின் வரலாறு களப்பிரர் காலத்து வரலாறு. அவர்கள் சநாதன தர்மம் விட்டு பௌத்த தர்மத்தைக் காத்தனர் எனும் முக்கிய தகவல் புத்ததத்தர் நூல்களின் வழியாகத் தெரிய வருகிறது.


இறுதியாக வள்ளுவர் பேசும் எண்குணத்தான் யார்? ஆதிசிவனா? இல்லை ஆதிநாதரான புத்தரா? என விளக்குகிறார் தேமொழி. ஆய்விற்குப் பின் எழுதப்பட்ட நூல். இந்நூல் சொல்லும் கருத்துகள் ஆராயப்பட வேண்டியவை.


முக்கோர் பகவர் என்பதற்கு இவர் தரும் சிற்பச்சான்று வடநாட்டு சிற்பங்களில் மட்டும் காணக்கிடைக்கிறது. சங்ககாலச் சிற்பங்கள் என ஏதுமில்லை. இலக்கியச்சான்று மட்டுமே. பௌத்தம் தமிழ் வயப்படுத்தப்பட்டதா? எனும் கேள்விக்கு இரண்டே சான்றுகள். ஒன்று வீரசோழியம் எனும் இலக்கண நூல். மற்றது மணிமேகலை எனும் காப்பியம். பௌத்தத்தின் முக்கிய நூலான திரிபிடிகம் தமிழாக்கப்பட்டதா? எனத்தெரியவில்லை. ஆனால் அயோத்திதாசர் திருக்குறள் என்பது உண்மையில், பௌத்தம் பேசும் மூன்று உண்மைகளைச் சொல்லும் திரிக்குறள் என்கிறார். பெரபடூர் (இந்தோனீசியா) கோயிலின் அமைப்பு இந்த திரிபிடிகம், திருக்குறள் சொல்லும் தத்துவங்களே என்பார் மலேசிய நண்பர் அரங்கண்ணல். (இது குறித்து அவரொரு வீடியோ வெளியிட்டுள்ளார்). ஆசைப்படுவோருக்கு துடுப்பு கிடைக்கும்). உலகமெல்லாம் பௌத்தக்குறியீடாக பிரபலமான தாமரைச் சூத்திரம் தமிழில் இன்னும் கிடைக்கவில்லை. பாலி மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.


எண்குணத்தான் யார்? எனும் கேள்வியைக் கேட்டு விடை தேடுகிறார் இறுதி அத்தியாயத்தில். எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய எளிய நூல் இது. இதன் மின் வடிவில் படங்கள் கலரில் இருக்கும் என நம்புகிறேன்.


இப்புத்தகம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடு. தேவைப்படுவோர் mythforg@gmail.com எனும்முகவரிக்கு எழுதிப் பெறவும்.

Monday, May 15, 2023

தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை

 


சிந்து சமவெளித் தமிழர்கள் தெற்கே இடம்பெயர்வு செய்த காலையில் புத்த நெறி தமிழக மக்களால் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு கிமு 300 தொடங்கி கிபி 12 நூற்றாண்டுவரை கோலோட்சிக் கொண்டிருந்தது. அதன் பின் மெல்ல, மெல்ல மறையத் தொடங்கியது. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களும் புத்த, சமணக் காப்பியங்களே. உலகின் முதல் கட்டமைக்கபட்ட missionary religion சமயம் என்றால் அது புத்தநெறிதான். வடக்கே கிமு 500 வாக்கில் உருவாகிய இம்மதம் மெல்ல மெல்ல இந்தியாவெங்கும் பரவி தமிழகம் வழியாக இலங்கை, பர்மா, மலேசியா, இந்தோனீசியா, சீனா, கொரியா, ஜப்பான் என்று பரவுகிறது. உலக பௌத்த பரவலுக்கு தமிழகம் பெரும் பங்களித்துள்ளது. ஜென் பௌத்தம் எனும் ஒரு அறிவுடை நெறியை உலகிற்குத் தந்தது தமிழகம். பல பல்கலைக்கழங்கள் இருந்த இடம் இத்தமிழ்பூமி. 

தியாகனூர் பகுதியில் எங்கு தேடினாலும் புத்தர் சிலைகள் கிடைக்கின்றன. பௌத்தம் பின்னால் வைணவத்துடன் இணைந்து விட்டதற்கான ஆதாரங்களும் அப்பகுதியில் கிடைக்கின்றன. சமத்துவம், சகோதர தத்துவம், மானுட நல்லிணக்கம் இவைகளை போதித்த புத்த நெறி 12 ம் நூற்றாண்டிற்குப் பிறகு காணாமல் போய்விடுகிறது. புழக்கத்தில் இல்லையெனினும் அது போதித்த நன்னெறிகள் இம்மண்ணில் இன்றளவும் தமிழ்ப் பண்பாடாக வாழ்ந்து வருகிறது. அதற்கு புத்துயிர் கொடுத்து மக்களிடமிருந்து புத்த சங்கத்திற்கு மாற்றும் பெருவிழா தியாகனூரில் நடந்தது. முக்கோல் என்பதை அடையாளமாக மக்கள் புத்த பிக்குகளிடம் கொடுத்து சங்க பரிபாலனம் செய்வித்தனர். புதுமையான இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிடும் தமிழகத்தில் பௌத்தம் எனும் நூல் வெளியீடும் அடங்கும். 

பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்.

-நா.கண்ணன்











Sunday, May 14, 2023

"தமிழகத்தில் பௌத்தம்" - நூல் வெளியீடு



"தமிழகத்தில் பௌத்தம்" தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு (நூலாசிரியர் முனைவர் தேமொழி, செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு) -  இன்று தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின்  பௌத்த எழுச்சி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  மாண்புமிகு டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களால் வெளியிடப்பட்டது.







தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிறு கிராமமும் வரலாற்றை தன்னுள்ளே கொண்டிருக்கின்றன. 

தியாகனூருக்கு 2 நாட்களுக்கு முன் சென்ற போது அங்குள்ள இரண்டு 12ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பங்களைப் பார்த்து அதிசயித்தேன். அருமையான சிற்பங்கள்.  சிறு கோயில் தான் என்றாலும் உள்ளே இருந்த சிற்பங்கள் வரலாற்றை நமக்கு உணர்த்துகின்றன.

அதே ஊரில் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோயில். ஆண்டாள் சன்னிதி, பத்மாவதி தாயார் சன்னிதி, பெருமாள் சிலை.. அனைத்தும் பிற்கால பாண்டியர், சோழர், நாயக்கர் காலத்தில் வளர்ச்சியுற்றிருக்கின்றன.     

இதன் தெப்பக்குளம் சிறப்பு.

அருகே ஸ்ரீகாமனாதீஸ்வரர் கோயில். மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நந்தியின் சிற்பம், ஏனைய சன்னிதிகள்.. அனைத்திலும்  பிற்கால கல்வெட்டுகள்.. ஆறகளூர் என்ற ஊரின் பெயரோடு கூடிய கல்வெட்டு என அனைத்துமே வரலாற்றுச் சிறப்புகள்.

இந்த சிற்றூரின் பல பகுதிகளில் நாட்டார் வழிபாடுகளைக் கொண்டாடும் வகையில் ஆங்காங்கே நாட்டார் வழிபாட்டுக் கோயில்கள். ஏழுகன்னிமார் வழிபாடு, வீரர் வழிபாடு, குதிரை, நாய் சுடுமண் பொம்மைகள் என அனைத்துமே மக்களின் பக்திக்கு ஊற்று.

ஒரு கிராமமே இப்படி பல வகையான சமய வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இன்னும் தேடிச் சென்றால் சில தேவாலயங்கள்.. மசூதிகள்.. இப்படி.

இவற்றோடு தென்னை, பனை, நெல்வயல்கள்.. பருத்தி வயல்.. எள்.. கரும்பு, உளுந்து வயல்கள்.  

பறவைகள் மகிழ்ந்திருக்கின்றன. 

இயற்கை கொஞ்சி விளையாடும் ஒரு கிராமம் தியாகனூர்.

வரலாறு சமயங்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றது இத்தமிழ் நிலத்தில். மக்கள் தான் இவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகின்ற காவலர்களாகத் திகழ்கின்றனர். 

அன்பை வளர்ப்பதுதானே சமயங்களின் நோக்கம்?  அன்பை மட்டுமே உங்கள்  சிந்தனைகளிலும் செயல்களிலும்  எழுத்துக்களிலும் வெளிப்படுத்துங்கள் நண்பர்களே.  உங்கள் சிந்தனைகளிலும் செயல்களிலும் அன்பு மட்டுமே நிறைந்திருக்கட்டும். 

-சுபா

16.5.2023

முனைவர் க.சுபாஷிணி 

தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு