முனைவர் நா. கண்ணன்
டாக்டர் தேமொழி எழுதியுள்ள "தமிழகத்தில் பௌத்தம்" எனும் நூல் தமிழ் மரபு அறக்கட்டளையின் சார்பாக சனி, மே 14, 2023 ல் வெளியீடு கண்டது.
1. புத்தரின் திருவுருவத்தோற்றம்
2. தமிழ் நாட்டு பௌத்த சிற்பங்கள்
3. முக்கோற்பகவர்
4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்
5. எண் குணத்தான்
எனும் ஐந்து அத்தியாயங்கள் கொண்டது இப்புத்தகம்.
பௌத்தம் தொன்மையானது, வடநாட்டிலிருந்து மௌரிய அரசர் அசோகர் காலத்தில் (கிமு 3) தெற்கே வந்தது. எனவே பௌத்த போதனைகளை பாலி மொழியிலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்து பின் தமிழ் சுயமாக இது பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது.
அலெக்ஸாண்டர் படையெடுப்பின் விளைவாக பௌத்தம் முதலில் காந்தாரம் (பாகிஸ்தான், ஆஃப்கான்) செல்கிறது. பாக்டீரியா எனும் பகுதியில் கிடைத்த சிற்பங்களே புத்தரின் முதல் உருவச்சிற்பங்களாகும். அவை கிரேக்கச் சிலைகளின் கலை வடிவில் இருக்கும். பின் பரவிய வெவ்வேறு பிரதேசங்களின் தன்மையை புத்தர் சிற்பங்கள் கொள்கின்றன. மீசை வைத்த புத்தர் சிலை தமிழகத்தில் மட்டும் இருப்பதாகத் தெரிகிறது. மீசை ஆண்மையின் குறியீடு. ரவி வர்மா கூட சிவனுக்கு மீசை வைத்து அழகு பார்க்கிறார். தமிழ் நாட்டில் மொத்தம் 70 புத்தர் சிலைகள் கிடைத்துள்ளன அறிகிறோம். பெரும்பாலும் அவை மகத நாடு என அறியப்படும் ஆறகளூர் (சேலம்) பகுதியாகும். அங்குதான் பௌத்த எழுச்சி மாநாடு நடந்தது.
இப்புத்தகத்தின் முக்கிய பங்களிப்பு முக்கோர்பகவர் யார்? பகவான் யார்? அந்தணர் யார்? எனும் கேள்விகளுக்கான பதில்கள். பௌத்த சந்நியாசிகள் தங்கள் சிறு உடைமைகளை வைக்க மூன்று கோல்கள் கொண்ட ஒரு உண்டியை உருவாக்குவார்களாம். அதுவே இந்த முக்கோல். இதற்கு எந்த தத்துவப்பின்னணியும் கிடையாது என்பது டாக்டர் தேமொழியின் கண்டுபிடிப்பு. மேலும், பகவர், பகவன் எனும் சொற்கள் புத்த பகவானைக் குறிக்க வந்தவையே தவிர இந்துத் தெய்வங்களையோ, அடியார்களையோ குறிக்க வந்தவை அல்ல என்றும் விளக்குகிறார் தேமொழி.
திருக்குறள் சொல்லும் அறவாழி அந்தணன் என்பது பௌத்த துறவிகளைச் சுட்ட வந்த சொல் என்கிறார் தேமொழி. வ.உ.சி அவர்கள் திருக்குறள் பாயிரம் அனைத்தும் துறவிகளின் புகழ் பாடுபவையேயன்றி இறைவனுக்கான பாடல்கள் அல்ல என்று சொன்னதைச் சுட்டிக்காட்டுகிறார் தேமொழி இந்நூலில்.
இதன் அடிப்படையில் முக்கோல் பௌத்த பிக்குகளுக்கு அன்று கொடுக்கப்பட்டது. இனிமேல் தமிழ் பௌத்த பிக்குகள் முன் போல் முக்கோர் பகவர் ஆவர் என்பது எதிர்பார்ப்பு. ஆனால் டோல்னா பையே சௌகர்யம் என பிக்குகள் செல்வதும், சிலர் பேக்பேக் வைத்துக் கொண்டு இலகுவாகச் செல்வதும் காணக்கிடைக்கிறது. நான் ஜப்பானில், கொரியாவில், தாய்லாந்தில், தைவானில் பார்த்த புத்த பிக்குகள் ரொம்ப மாடர்ன். அவர்களுக்கு முக்கோல் தேவைப்படாது.
இந்து சந்நியாசிகளும் கோல் தாங்குகின்றனர். அது தத்துவத்தின் பாற்பட்டது. சர்வம் ஏகம் எனும் அத்வைத சந்நியாசிகள் ஒரு கோல், இறைவன்-அடியார் எனப்பட்டது உலகம் எனும் மாத்வ சந்நியாசிகள் இரண்டு கோல்களைத் தாங்குகின்றனர். இராமானுஜர் போன்ற விசிட்டாத்துவ சந்நியாசிகள் சித், அசித், ஈஸ்வரன் எனும் மூன்று உண்மைகளைச் சுட்ட மூன்று கோல்கள் தாங்குகின்றனர். It has no utility value and is only symbolic.
சங்கம் மருவிய காலத்தின் வரலாறு களப்பிரர் காலத்து வரலாறு. அவர்கள் சநாதன தர்மம் விட்டு பௌத்த தர்மத்தைக் காத்தனர் எனும் முக்கிய தகவல் புத்ததத்தர் நூல்களின் வழியாகத் தெரிய வருகிறது.
இறுதியாக வள்ளுவர் பேசும் எண்குணத்தான் யார்? ஆதிசிவனா? இல்லை ஆதிநாதரான புத்தரா? என விளக்குகிறார் தேமொழி. ஆய்விற்குப் பின் எழுதப்பட்ட நூல். இந்நூல் சொல்லும் கருத்துகள் ஆராயப்பட வேண்டியவை.
முக்கோர் பகவர் என்பதற்கு இவர் தரும் சிற்பச்சான்று வடநாட்டு சிற்பங்களில் மட்டும் காணக்கிடைக்கிறது. சங்ககாலச் சிற்பங்கள் என ஏதுமில்லை. இலக்கியச்சான்று மட்டுமே. பௌத்தம் தமிழ் வயப்படுத்தப்பட்டதா? எனும் கேள்விக்கு இரண்டே சான்றுகள். ஒன்று வீரசோழியம் எனும் இலக்கண நூல். மற்றது மணிமேகலை எனும் காப்பியம். பௌத்தத்தின் முக்கிய நூலான திரிபிடிகம் தமிழாக்கப்பட்டதா? எனத்தெரியவில்லை. ஆனால் அயோத்திதாசர் திருக்குறள் என்பது உண்மையில், பௌத்தம் பேசும் மூன்று உண்மைகளைச் சொல்லும் திரிக்குறள் என்கிறார். பெரபடூர் (இந்தோனீசியா) கோயிலின் அமைப்பு இந்த திரிபிடிகம், திருக்குறள் சொல்லும் தத்துவங்களே என்பார் மலேசிய நண்பர் அரங்கண்ணல். (இது குறித்து அவரொரு வீடியோ வெளியிட்டுள்ளார்). ஆசைப்படுவோருக்கு துடுப்பு கிடைக்கும்). உலகமெல்லாம் பௌத்தக்குறியீடாக பிரபலமான தாமரைச் சூத்திரம் தமிழில் இன்னும் கிடைக்கவில்லை. பாலி மொழிபெயர்ப்பு கிடைக்கிறது.
எண்குணத்தான் யார்? எனும் கேள்வியைக் கேட்டு விடை தேடுகிறார் இறுதி அத்தியாயத்தில். எடுத்தால் ஒரே மூச்சில் படித்துவிடக்கூடிய எளிய நூல் இது. இதன் மின் வடிவில் படங்கள் கலரில் இருக்கும் என நம்புகிறேன்.
இப்புத்தகம் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடு. தேவைப்படுவோர் mythforg@gmail.com எனும்முகவரிக்கு எழுதிப் பெறவும்.
No comments:
Post a Comment