சிந்து சமவெளித் தமிழர்கள் தெற்கே இடம்பெயர்வு செய்த காலையில் புத்த நெறி தமிழக மக்களால் பெருமளவு ஏற்றுக் கொள்ளப்பட்டு கிமு 300 தொடங்கி கிபி 12 நூற்றாண்டுவரை கோலோட்சிக் கொண்டிருந்தது. அதன் பின் மெல்ல, மெல்ல மறையத் தொடங்கியது. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களும் புத்த, சமணக் காப்பியங்களே. உலகின் முதல் கட்டமைக்கபட்ட missionary religion சமயம் என்றால் அது புத்தநெறிதான். வடக்கே கிமு 500 வாக்கில் உருவாகிய இம்மதம் மெல்ல மெல்ல இந்தியாவெங்கும் பரவி தமிழகம் வழியாக இலங்கை, பர்மா, மலேசியா, இந்தோனீசியா, சீனா, கொரியா, ஜப்பான் என்று பரவுகிறது. உலக பௌத்த பரவலுக்கு தமிழகம் பெரும் பங்களித்துள்ளது. ஜென் பௌத்தம் எனும் ஒரு அறிவுடை நெறியை உலகிற்குத் தந்தது தமிழகம். பல பல்கலைக்கழங்கள் இருந்த இடம் இத்தமிழ்பூமி.
தியாகனூர் பகுதியில் எங்கு தேடினாலும் புத்தர் சிலைகள் கிடைக்கின்றன. பௌத்தம் பின்னால் வைணவத்துடன் இணைந்து விட்டதற்கான ஆதாரங்களும் அப்பகுதியில் கிடைக்கின்றன. சமத்துவம், சகோதர தத்துவம், மானுட நல்லிணக்கம் இவைகளை போதித்த புத்த நெறி 12 ம் நூற்றாண்டிற்குப் பிறகு காணாமல் போய்விடுகிறது. புழக்கத்தில் இல்லையெனினும் அது போதித்த நன்னெறிகள் இம்மண்ணில் இன்றளவும் தமிழ்ப் பண்பாடாக வாழ்ந்து வருகிறது. அதற்கு புத்துயிர் கொடுத்து மக்களிடமிருந்து புத்த சங்கத்திற்கு மாற்றும் பெருவிழா தியாகனூரில் நடந்தது. முக்கோல் என்பதை அடையாளமாக மக்கள் புத்த பிக்குகளிடம் கொடுத்து சங்க பரிபாலனம் செய்வித்தனர். புதுமையான இந்த நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளை வெளியிடும் தமிழகத்தில் பௌத்தம் எனும் நூல் வெளியீடும் அடங்கும்.
பௌத்த சங்கத்தை அக்கறையோடு யாரும் மீட்டெடுக்காத தருணத்தில் திரு.கௌதம சன்னா தலைமையிலான ஓர் குழு பல்சமய ஆசீர்வாதத்துடன் நேற்று புத்த சங்கம் அமைத்திருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு டயோசியஸ், முஸ்லிம்களுக்கு ஜும்மா, வைதீகர்களுக்கு மடங்கள், ஆதீனங்கள் இருப்பது போல் புத்த நெறிக்கு பௌத்த சங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பிற்கு எந்தவொரு தமிழக கட்சிகளும் ஆதரவுதராத நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி முழு ஆதரவு வழங்கியுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்றதொரு சமயம் பௌத்தம் என டாக்டர் அம்பேத்கார் 20 வருட ஆய்விற்குப் பின் கண்டெடுத்த உண்மையை அடிப்படையாகக் கொண்டு தாழ்த்தபட்ட அனைத்துத் தமிழர்களின் சங்கமாக இது அமைகிறது. சவாலுள்ள இப்பெரும் முயற்சியை கௌதம சன்னா எனும் இளைஞர் எடுத்திருக்கிறார். அவரை பௌத்த அபிமானி எனும் அளவில் நான் வாழ்த்துகிறேன்.
-நா.கண்ணன்
No comments:
Post a Comment