"தமிழகத்தில் பௌத்தம்" தமிழ் மரபு அறக்கட்டளை பதிப்பகத்தின் புதிய வெளியீடு (நூலாசிரியர் முனைவர் தேமொழி, செயலாளர், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு) - இன்று தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவையின் பௌத்த எழுச்சி மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்களால் வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு சிறு கிராமமும் வரலாற்றை தன்னுள்ளே கொண்டிருக்கின்றன.
தியாகனூருக்கு 2 நாட்களுக்கு முன் சென்ற போது அங்குள்ள இரண்டு 12ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பங்களைப் பார்த்து அதிசயித்தேன். அருமையான சிற்பங்கள். சிறு கோயில் தான் என்றாலும் உள்ளே இருந்த சிற்பங்கள் வரலாற்றை நமக்கு உணர்த்துகின்றன.
அதே ஊரில் ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் கோயில். ஆண்டாள் சன்னிதி, பத்மாவதி தாயார் சன்னிதி, பெருமாள் சிலை.. அனைத்தும் பிற்கால பாண்டியர், சோழர், நாயக்கர் காலத்தில் வளர்ச்சியுற்றிருக்கின்றன.
இதன் தெப்பக்குளம் சிறப்பு.
அருகே ஸ்ரீகாமனாதீஸ்வரர் கோயில். மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் நந்தியின் சிற்பம், ஏனைய சன்னிதிகள்.. அனைத்திலும் பிற்கால கல்வெட்டுகள்.. ஆறகளூர் என்ற ஊரின் பெயரோடு கூடிய கல்வெட்டு என அனைத்துமே வரலாற்றுச் சிறப்புகள்.
இந்த சிற்றூரின் பல பகுதிகளில் நாட்டார் வழிபாடுகளைக் கொண்டாடும் வகையில் ஆங்காங்கே நாட்டார் வழிபாட்டுக் கோயில்கள். ஏழுகன்னிமார் வழிபாடு, வீரர் வழிபாடு, குதிரை, நாய் சுடுமண் பொம்மைகள் என அனைத்துமே மக்களின் பக்திக்கு ஊற்று.
ஒரு கிராமமே இப்படி பல வகையான சமய வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. இன்னும் தேடிச் சென்றால் சில தேவாலயங்கள்.. மசூதிகள்.. இப்படி.
இவற்றோடு தென்னை, பனை, நெல்வயல்கள்.. பருத்தி வயல்.. எள்.. கரும்பு, உளுந்து வயல்கள்.
பறவைகள் மகிழ்ந்திருக்கின்றன.
இயற்கை கொஞ்சி விளையாடும் ஒரு கிராமம் தியாகனூர்.
வரலாறு சமயங்களோடு பின்னிப் பிணைந்து கிடக்கின்றது இத்தமிழ் நிலத்தில். மக்கள் தான் இவற்றைப் போற்றிப் பாதுகாத்து வருகின்ற காவலர்களாகத் திகழ்கின்றனர்.
அன்பை வளர்ப்பதுதானே சமயங்களின் நோக்கம்? அன்பை மட்டுமே உங்கள் சிந்தனைகளிலும் செயல்களிலும் எழுத்துக்களிலும் வெளிப்படுத்துங்கள் நண்பர்களே. உங்கள் சிந்தனைகளிலும் செயல்களிலும் அன்பு மட்டுமே நிறைந்திருக்கட்டும்.
-சுபா
16.5.2023
முனைவர் க.சுபாஷிணி
தலைவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
No comments:
Post a Comment