சுந்தர சோழன்
முனைவர் தேமொழி அவர்கள் எழுதி, தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு அண்மையில் வெளியிட்டுள்ள மிகச் சிறப்பான நூல். கடந்த வார இறுதியில் இதனை வாங்கிய நான், இரண்டு நாட்களில் ஒரே மூச்சில் இதனை வாசித்து முடித்தேன். மிகச் சிறப்பான வாசிப்பு அனுபவம்.
பண்டைத் தமிழகத்தில் பவுத்தம் செழித்தோங்கியது என்பதை மறுக்க முடியாத சான்றுகளுடன் நிறுவும் நோக்கில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இதனை நிறுவும் தனது முயற்சியில் நூலாசிரியர் முனைவர் தேமொழி அவர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியும் பெறுகிறார் என்பது மகிழ்வளிக்கும் செய்தி.
இந்நூல் 94 பக்கங்கள் மட்டுமே கொண்டது. நீண்ட சலிப்பூட்டும் நூல்களை வாசிக்கத் தயங்கும் 2K Kids எனப்படும் இளம் தலைமுறையினர் கூட இதனை வாசிக்கும் வகையில், சுருக்கமாக நறுக்குத் தெறித்த வகையில் இதனை எழுதி இருக்கிறார் ஆசிரியர் முனைவர் தேமொழி அவர்கள். அவருக்கு நமது வாழ்த்துகள்.
அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தரித்த குறள்
என்னும் கதையாக நூறுக்கும் குறைவான பக்கங்களில் தான் சொல்ல வந்த அனைத்தையும் மிகச் சிறப்பாக முன்வைத்து விடுகிறார் இதன் ஆசிரியர்.
1. புத்தரின் திருவுருவத் தோற்றம்
2. தமிழ்நாட்டுப் பவுத்தச் சிற்பங்கள்
3. முக்கோற்பவர்
4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்
5. எண்குணத்தான்
என இந்நூல் ஐந்து பகுதிகளைக் கொண்டதாகத் திட்டமிட்ட முறையில் கட்டமைக்கப் பட்டுள்ளது.
இவ்வைந்து பகுதிகளிலும் வரலாறு, இலக்கியம், கல்வெட்டியல் எனப் பல்வேறு துறை சார் சான்றுகள் முன்வைக்கப் பட்டுள்ளன என்ற போதிலும், கீழ்க்கண்டவாறு இவற்றில் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கு இருப்பதை நான் காண்கிறேன். அல்லது அவ்வாறு நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.
1. புத்தரின் திருவுருவத் தோற்றம் – Iconography – சிலை வடிவமைப்பியல்?
2. தமிழ்நாட்டுப் பவுத்தச் சிற்பங்கள் – History and Archeology – வரலாறு மற்றும் தொல்லியல்
3. முக்கோற்பவர் – Literature and Iconography – இலக்கியம் மற்றும் சிலை வடிவமைப்பியல்
4. புத்ததத்தர் வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள் –Epigraphy and History – கல்வெட்டு ஆய்வியல் மற்றும் வரலாறு
5. எண்குணத்தான் –Comparative study of Thirukkural & Buddhist Phiolosophy
இது குறித்த எனது வாசிப்பு அனுபவத்தை விரைவில் எழுத வேண்டும். செய்கிறேன். தற்போதைக்கு எனது வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையிலான புரிதல் மட்டும்.
மிகச் சிறப்பான நூலை வாசித்தேன் என்பதும் பயனுள்ள வாசிப்பு அனுபவம் ஆக இருந்தது என்பதிலும் ஐயமில்லை.
ரூ.120 விலை கொண்ட இந்நூலை வாசிக்க விரும்பும் அன்பர்கள் www.commonfolks.in தளத்தின் மூலம் இதனை ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
இந்நூல் பேசும் தலைப்புகள் குறித்து அறிய விரும்பும் ஒவ்வொரு வாசகரும் தவறாது வாசிக்க வேண்டிய நூல் என்பதில் ஐயமில்லை.
தமிழர்களின் பண்டைய வரலாறு குறித்த நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் தமிழ் மரபு அறக்கட்டளைப் பன்னாட்டு அமைப்பு மிகச் சிறப்பானதொரு நூலை நமக்கு அளித்துள்ளது. அவர்களது பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.