சோழ நாட்டில் புத்தர் சிலைகள் — முனைவர் பா.ஜம்புலிங்கம்
தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
Tuesday, November 29, 2022
Wednesday, November 2, 2022
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 3
முனைவர் க.சுபாஷிணி
புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு - நூல் விமர்சனம் 3
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
இந்த நூலில் மூன்றாம் அத்தியாயம் சங்க காலத்து தமிழ் நிலத்து மன்னர்களைப் பற்றியும், அவர்களின் அரசு, ஆட்சி மற்றும் சமூகம் பற்றிய சங்கப்பாடல்கள் தரும் சான்றுகள் சிலவற்றோடு தொடங்குகிறது.
சேர, சோழ, பாண்டிய மன்னர்களை ஆதரித்தும் எதிர்த்தும் ஆட்சி செய்த கொங்கர், கோசர், வேளிர் போன்ற சிற்றரசர்கள், சிற்றூர் தலைவர்கள் பற்றிய சங்கப் பாடல் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ஊர் தலைவர்களாக இருந்தவர்களும் புலவர்களாக கவி பாடியிருக்கின்றனர் என்ற செய்தியும், கல்வியாளர்களாக ஆட்சியாளர்கள் இருந்த செய்தியையும் இப்பகுதி விளக்குகிறது.
வணிகர்கள் சமண சமயத்தையும் பௌத்த சமயத்தையும் பேணியவர்களாக இருந்த செய்திகள்; கடல் கடந்து சென்று வணிகம் செய்து வந்த செய்திகள்; தூர நாடுகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வணிகம் செய்ய வந்த அயல் நாட்டினர் உள்ளூர் வணிகர்களுடன் கொண்டிருந்த தொடர்பு மற்றும் வணிகப் பொருட்கள் பற்றி சங்கப்பாடல்கள் கூறுகின்ற செய்திகளும் இப்பகுதியில் விளக்கப்படுகின்றன.
கல்வி வளர்ச்சியும், வளமான சமூகச் சூழலும், சிறந்த வணிகச் சூழலும் இருந்த காலகட்டத்தில் ஆரியர்களின் தென்னாட்டிற்கான வருகை மிகப் பெரிய மாற்றத்தைத் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியது. வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகள் நடத்துகின்ற மரபினர் தமிழ்நாட்டில் நுழைந்த பின்னர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுடன் இரண்டறக் கலந்து மன்னர்களின் நம்பிக்கையைப் பெற்றனர். இதன் காரணத்தால் மன்னர்களும் வேதத்தை முதன்மையாகக் கொண்டு வேள்விகளில் ஈடுபாடு கொண்டு அந்தணர்களுக்கு பொன்னையும் பொருளையும் நிலங்களையும் வழங்கத் தொடங்கிய சமூக மாற்றமும் தொடங்கியது. அந்தணர்கள் அரசு நிர்வாகத்துறையில் புகுந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு சடங்குகள் நிறைந்த மதக் கோட்பாட்டை ஆதரித்துத் தங்கள் ஆட்சியில் மாற்றத்தைப் புகுத்தினர் என்று விளக்குகிறார் நூலாசிரியர்.
இத்தகைய சூழலில், சங்க கால மன்னர்களுக்குத் தாங்கள் வழங்கி வந்த ஆதரவை வணிகர்கள் விலக்கிக் கொள்ள நேர்ந்தமையே களப்பிரர் கால ஆட்சி தமிழ்நாட்டில் தடம் பதிக்கக் காரணமாக அமைந்தது என்பதாக இந்த அத்தியாயம் நமக்குச் சங்கம் மருவிய காலத்திற்கான காரணத்தை விளக்குகிறது.
இதன் தொடர்ச்சியாக அமைகின்ற நூலின் நான்காவது பகுதி களப்பிரர் கால அரசமைப்பு பற்றிய செய்திகளை விளக்குவதாக அமைகின்றது.
வரலாற்று ஆய்வறிஞர்களுக்குக் களப்பிரர் கால சமூக சூழலை அறிந்து கொள்வதற்கு தேவையான சான்றுகள் கிடைக்கவில்லையே என்ற ஒரு குறை மிக நீண்ட காலமாக இருந்தது. இதற்கு நூலாசிரியர் தெரிந்ததைக் கொண்டு தெரியாததை ஊகித்தரியும் செயல் முறையை பயன்படுத்தும் வகையைச் சுட்டிக்காட்டுகிறார்.
சிறு மன்னர்களும், வேளிர்களும், வணிகத் தலைவர்களும் சங்க கால அரசர்கள் வேத கேள்வியை அடிப்படையாகக் கொண்ட அந்தணர்களின் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு அவர்களை ஆதரிக்க தொடங்கிய பின்னர் இயல்பாகவே தங்களது ஆதரவை விலக்கிக் கொண்டு களப்பிரர்க்கு ஆதரவளித்து அவர்களின் அரசு தமிழகத்தில் அமைய காரணமாகியது என்ற காரணத்தை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகிறார்.
பூலாங்குறிச்சி கல்வெட்டும் கரூர் கல்வெட்டும் களப்பிரர் கால வரலாற்றை அறிந்து கொள்ள நமக்கு கிடைக்கின்ற முக்கியச் சான்றுகளாக அமைகின்றன. இதில் குறிப்பாக கரூர் கல்வெட்டு ஐம்பெருங்குழு, சங்கம் போன்ற முக்கிய செய்திகளை வெளிப்படுத்துகிற ஒரு கல்வெட்டாக அமைகிறது. சங்கம் என்பது பௌத்த அறிஞர்களும், சமண அறிஞர்களும் தங்கள் சமயப் பணியை ஆற்ற ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பு என்பதோடு ஐம்பெரும் குழுக்கள் என்ற வணிகக் குழுக்கள் நிர்வாகத்தை நடத்துகின்ற பாதுகாக்கின்ற பொறுப்பை ஏற்றிருந்த செய்திகளையும் அறிய முடிகின்றது.
பூலாங்குறிச்சி கல்வெட்டு, முக்கியமாக மூன்று பௌத்த ஆலயங்கள் இருந்த செய்தியை வெளிப்படுத்துகின்றது. இந்தப் பௌத்த கோயில்கள் ஏரியின் கண்மாயை ஒட்டியவாறு அமைந்தது என்றும், தேவகுலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும், இது பற்றிய கல்வெட்டை உருவாக்கிய போது மன்னர் இந்த ஆணையை வெளியிட, அறிஞர் குழு இதனை ஓலையில் எழுதி சரி பார்த்து பின்னர் இது கல்வெட்டில் செதுக்கப்பட்டது என்ற செய்தியையும் நாம் அறிய முடிகிறது. இந்த தேவகுலம் என குறிப்பிடப்படும் கோயில் அமைப்பானது சிறந்த நிர்வாக மையமாகவும் இருந்தது என்பதை நூலாசிரியர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதில் வருந்தத்தக்க செய்தி என்னவென்றால், இங்கு முக்கியமாக குறிப்பிடப்படும் கரூர் கல்வெட்டு இப்போது தொலைந்து போய்விட்டது என்ற செய்தி. அது ஒரு சிறு பாறையாக இருந்ததாலும், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்ததாகவும், அதனைப் பற்றிய செய்தியை அறிந்து அது பதியப்பட்ட பின்னரும் கூட பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தினால் சாலை விரிவாக்கத்தின் போது அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ அது சிதைந்து உடைந்து காணாமல் போய்விட்டது. ஐம்பெரும் குழுவான வணிகக் குழுவைப் பற்றி கூறுகின்ற இந்த மிக முக்கியம் வாய்ந்த கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு கல்வெட்டு இன்று நாம் தொலைத்த ஒரு வரலாற்றுச் சின்னமாகிவிட்டது.
இந்த ஒரு கல்வெட்டு மட்டுமல்ல; நமது அக்கறையின்மை காரணத்தினாலும் வரலாற்றுச் சான்றுகளை மதிக்க தெரியாத மூடத்தனத்தினாலும் தமிழ்நாட்டு மக்கள் இழந்தவை ஏராளம்.
இழந்து கொண்டிருப்பதும் ஏராளம்!
தொடர்கிறது..!
-சுபா
--------------
நூல்: புதிய நோக்கில் களப்பிரர் வரலாறு
நூலாசிரியர்: ஆ.பத்மாவதி
வெளியீடு: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்