Monday, March 26, 2018

ஒடிஷாவின் பௌத்தச் சுவடுகளைத் தேடி

 


ஒடிஷாவின் பௌத்தச் சுவடுகளைத் தேடிய பயணமாக நண்பகல் தொடங்கி எனது முதல் நாள் பயணம் அமைந்தது. 

கொளுத்தும் வெயில். சுட்டெரித்து விட்டது. ஆனாலும் இன்று கண்ட காட்சிகளும் அறிந்து கொண்ட விசயங்களும் மிக அற்புதமானவை.  பிரம்மாண்டமானவை.

புவனேஸ்வர் நகரிலிருந்து காலை 11 மணி வாக்கில் புறப்பட்டு பயணிக்கத் தொடங்கினோம்.

எனது பயணப்பட்டியலில் அடுத்து இருந்தது லலிதகிரி, ரத்னகிரி, உதயகிரி ஆகிய மூன்று பௌத்த வளாகங்கள்.  இந்தியத் தொல்லியல் துறையினால் பாதுகாக்கப்படும் ​புராதனச் சின்னப்பகுதியாக இவை உள்ளன.

2 மணி நேர பயணத்திற்குப் பின்னர் லலிதகிரியில் பதிவினைத் தொடங்கினோம். இப்பகுதியில் தொல்லியல் ஆய்வினை நிகழ்த்திய டாக்டர்.பட்னாயக்கும் உடன் வந்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் தான்.

மணல் மூடிக் கிடந்த குன்றினை அகழ்வாய்வு செய்ததில் கிடைத்த ஸ்தூபப் பகுதி - கண்கொள்ளாக் காட்சியாக இது உள்ளது. இந்த வளாகம் முழுக்க ஆங்காங்கே புத்த விகாரைகள் இருந்தமைக்கானச் சான்றுகள் நிறைந்துள்ளன. இடம் மிகப் பசுமையாகப் பாதுகாக்கப்படுகின்றது. கி.மு  2ம் நூற்றாண்டு காலகட்டத்திலான கட்டட அமைப்புக்கள் தொடங்கி கி.பி 13ம் நூற்றாண்டு வரையிலான கோயில் அமைப்புகள் உள்ளன. 

புத்தரின் படிமம் உள்ள 8 ஸ்தூபங்களில் இதுவும் ஒன்று என அறியப்படுகின்றது. அகழ்வாய்வில் கண்டெடுக்கபப்ட்ட  அப்படிமம் உள்ள சிறிய பேழை புவனேஸ்வர் அருங்காட்சியகத்தில் உள்ளது. 

அடுத்து அங்கிருந்து புறப்பட்டு உதயகிரி வந்தடைந்தோம். இங்குள்ள அருங்காட்சியகத்தின் பதிவுகளைச் செய்து கொண்டேன். இது மிகப் பெரிய வளாகம். பிரம்மாண்டமான கோயில் ஒன்று, அதனைச் சுற்றி நூற்றுக்கணக்கான சிறிய வடிவிலான விகாரைகள் என நிறைந்துள்ளன. 

இறுதியாக எனது பயணத்தில் இடம் பெற்றது உதயகிரி. மலைகள் சூழ்ந்த உயர்ந்த பகுதி. தேரவாதம், மஹாயனம், வஜ்ராயனம் ஆகிய 3 வகை பௌத்த பிரிவுகளும் இப்பகுதியில் செழித்து வளர்ந்திருந்தமையை இங்குள்ள வளாகம் சான்று பகர்கின்றது. அற்புதமான சூழல். எங்கு காணினும் சிதலமடைந்த பௌத்த விகாரைகள் என இது மிக ரம்மியமான சூழலை உருவாக்கியது.

ஒடிஷாவிலிருந்து கலிங்கர்கள் கிழக்காசியப் பகுதிக்கு பௌத்தத்தைக் கொண்டு சென்றிருக்கின்றார்கள். இலங்கை நாகப்பட்டினம், காவிரிப்பூம்பட்டினம் போன்ற துறைமுக நகர்களிலிருந்து பௌத்த பிக்குகள் கிழக்காசியா  தூரக்கிழக்காசியா என பல இடங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர். சீனர்கள் வழக்கில் உள்ள புத்தர், அவலோகிதர், தாராதேவி சிற்ப அமைப்புடன் கூடிய ஆரம்பகால வடிவங்களை ரத்னகிரி பௌத்த வளாகத்தில் கண்டேன்.

இறுதியாக தாராபூர்  (Tarapur)  அகழ்வாய்வுப் பகுதிக்கு வந்து அங்குள்ள அருங்காட்சியத்தில் தகவல்கள் சேகரித்துக் கொண்டேன்.

பிரம்மாண்டங்களைத் தரிசித்த பிரம்மாண்ட சிந்தனை மனதில் ஆழப்படிந்து விட்டது. நான் இன்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திற்கே சென்று விட்ட மன நிலையோடு திரும்பினேன். 

பேச வேண்டாம் என நினைத்தாலும் பேசிப் பேசி தொண்டைப்புண் மேலும் பெரிதாகி விட்டது. இன்றைய இரவு பேசாது ஓய்வெடுத்தல் தான் நாளை கொஞ்சமாவது பேசலாம் என்ற நிலை தான்  இப்போது.

-சுபா






Friday, March 16, 2018

Theon Hou Temple - சீன பௌத்த ஆலயம்



Theon Hou Temple - இது ஒரு சீன பௌத்த ஆலயம். தமிழகத்திலிருந்து மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஆய்வாளர்களில் சிலரை இன்று இக்கோயிலுக்கு அழைத்துச் சென்றிருந்தோம்.

மணிமேகலா தெய்வம் - அல்லது தாராதேவி அன்னைக்கு எழுப்பப்பட்டுள்ள கோயில் இது. புத்தரின் வெவ்வேறு வடிவங்களிலான சிற்பங்கள் சில இங்கு வைக்கப்பட்டுள்ளன. சீனர்களின் பண்டைய வழிபாட்டு அமசங்களும் இந்திய பௌத்த சமயக் கூறுகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது போன்ற ஒரு வடிவமாக இக்கோயிலைக் காணலாம். இன்றைக்கு ஈராயிரம் ஆண்டுகள் காலகட்டத்தில் பௌத்தம் பரவிய தமிழ் மக்கள் புலம் பெயர்ந்த மலேசியா போன்ற நாடுகளில் மாறுபட்ட வடிவங்களில் பௌத்த ஆலயங்கள் வழிபாட்டுக் கலாச்சாரத்தில் எவ்வாறு உள்ளன என்பதற்கு இக்கோயில் ஒரு நல்ல உதாரணம்.