இந்தப் பதிவில் இறுதியாக நான் வழங்குவது வாட் சுக்தோர்ப்ரன்சாராம் (Wat Sukthornprakcharam) பௌத்த விகாரை மற்றும் பள்ளி அமைந்திருக்கும் வளாகம். இது ஒரு கலைப் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயில் நேர்த்தியாகக் கலை நுணுக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. மலாய் மொழியில் Selamat Datang, அதாவது நல்வரவு என்று எழுதப்பட்டு அதன் கீழ் பௌத்த விகாரையின் பெயர் வழங்கப்பட்டுள்ளது.
உள்ளே நுழைந்து வளாகத்தின் உள்ளே செல்லும்போது முதலில் நமக்குத் தென்படுவது ஏழு கிழமைகளுக்கும் எழுவகை புத்தரின் சிற்பங்கள். திங்கள் தொடங்கி ஞாயிறு வரை என ஒவ்வொரு நாளையும் குறிப்பிட்டு அதற்கேற்ற வகையில் ஒரு உருவத்தை அமைத்திருக்கின்றார்கள்.
ஒரு குன்றின் மேல் அமைந்தது போல இந்தக் கோவில் வளாகம் இருக்கின்றது. படிகளில் ஏறிச் சென்றால் வலது புறமும் இடது புறமும் எனச் சிறிய சிறிய சன்னிதிகள் உள்ளன.
ஒரு பகுதியில் 4 தலையுடன் பிரம்மாவின் உருவம் அமைக்கப்பட்ட சிற்பம் உள்ளது. மற்றும் ஒரு சன்னிதியில் போதிசத்துவருக்கான உருவச்சிலை அமைந்திருக்கின்றது. ஏனைய சன்னிதிகளில் புத்தரின் பல்வேறு வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றைக் கடந்து குன்றின் உச்சிப் பகுதிக்குச் சென்றால் அங்கே சாய்ந்த நிலையில் சயன புத்தரின் உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்றதொரு உருவச்சிலை, ஆனால் மிகப் பிரம்மாண்டமான வகையில் பினாங்கு மாநிலத்தில் இருக்கின்றது.
இந்தப் பகுதியிலிருந்து இறங்கி இடது புறமாக மேலும் நடந்தால் அங்குப் பூங்கா மேலும் விரிவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
முதலில் வருவது மிக அழகிய வடிவில் அமைக்கப்பட்ட ஒரு சன்னிதி. இதில் புத்தர் தனது சீடர்களுக்கு ஞானம் வழங்குவது போலும், கீழே தரையில் சீடர்கள் அமர்ந்திருப்பது போலும் சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதிக்கு வரும் அனைவரையும் இங்கே அமர்ந்திருந்து தியானம் செய்யும் வகையில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
இதனைக் கடந்து வரும்போது ஆங்காங்கே விலங்குகளின் சிற்பங்கள் தென்படுகின்றன. அதற்கடுத்து கீழே வரும்போது அழகான ஒரு குளத்தின் நடுவே தாராதேவி நின்ற நிலையில் அருள்பாலிப்பது போல அமைக்கப்பட்டுள்ளது.
அதற்குக் கீழே வரும்போது புத்தரின் அன்னை மற்றும் அவரது தோழியர் சூழ நிற்கும் சிற்ப வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண் வடிவங்கள் சேலை அணிந்த வகையில் இந்தச் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இறுதியாக நாம் காண்பது ஒரு சிற்பம். இது குதிரை ஒன்று பின்புறத்தில் நிற்க புத்தர் தனது தலைமுடியை இழுத்து கத்தியால் வெட்டுவது போல ஒரு காட்சி.
இவற்றையெல்லாம் கடந்து வந்தால் பவுத்த பள்ளி அமைந்திருக்கும் இடத்திற்கு வரலாம். இப்பகுதி வழிபாடுகளும், தியான நிகழ்ச்சிகளும் நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பௌத்த விகாரைக்கு வாசல் புறத்தில் வழங்கப்பட்டுள்ள பெயரை குறிப்பிட்டு நான் இணையத்தில் தகவல் தேடியபோது எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த பௌத்த விகாரை மட்டுமல்ல.. மேலும் சில பௌத்த விகாரைகளின் தகவல்களும் இணையத்தில் கிடைக்கும் வகையில் இல்லை. நேரடியாகச் சென்று அவற்றைக் காணும் போதுதான் இத்தனை பௌத்த விகாரைகள் இந்தப் பகுதியில் இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள முடிகின்றது.
பௌத்தம் கிபி 1, 2 ஆகிய காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குறிப்பாக காஞ்சிபுரம், நாகப்பட்டினம் பகுதியில் இருந்தும் கடல்வழி பயணித்த வணிகர்கள் மற்றும் பௌத்த பிக்குகளின் முயற்சிகளினால் கிழக்காசியா மற்றும் தூர கிழக்காசிய நாடுகளுக்குப் பரவியது. புதிதாகப் பரவிய நிலத்தில் அவை மேலும் அந்தந்த நிலத்திற்கு ஏற்ற பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக்கொண்டு வழிபாடுகளில் மேலும் சில புதுமைகளைப் புகுத்திக் கொண்ட வகையில் மாற்றம் கண்டன. மாற்றங்கள் உட்புகுந்தன என்றாலும்கூட பழமையான பௌத்தப் பள்ளிகள் புதுப்பிக்கப்பட்டு வழிவழியாக வழிபாடு செய்யப்பட்ட பகுதிகளில் வழிபாடுகள் தொடர்வதை கிழக்காசிய நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் இன்றும் காணமுடிகிறது.
மலாயா மலேசியாவாக மாறிய பின்னரும் கூட அரச சமயமாக இஸ்லாமிய சமயம் முக்கியத்துவம் பெற்ற பின்னரும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகள் நிறைந்திருக்கின்றன என்பது புலப்படுகிறது. பௌத்த விகாரைகள் சீனர்களுக்கும் தாய்லாந்து மக்களுக்கும் உரிய வழிபாட்டுத்தலங்கள் தானே என ஒதுக்கி விடாமல் தமிழ் மரபு மற்றும் பண்பாட்டின் தொடர்ச்சி என்ற ரீதியில் இவற்றைத் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து அவற்றின் வரலாற்று பின்னணிகளைத் தேடவேண்டிய அவசியம் இருக்கிறது. இத்தகைய தேடுதல்கள் நமக்கு மேலும் சில புதிய தரவுகளை வழங்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.
-சுபா
11.4.2022
#subastravels
#subainmalaysia
#BuddhismInMalaysia