பொலன்னறுவா பௌத்த விகாரைகள் — முனைவர் ஆ. பத்மாவதி
தமிழகத்தில் பௌத்தம் - இது தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பௌத்த பண்பாடு, வரலாறு, அகழாய்வு, மற்றும் ஆய்வுகள் தொடர்பான வலைத்தளம்.
Friday, September 13, 2024
Wednesday, September 11, 2024
பள்ளூர் புத்தர் சிற்பங்கள்
அண்மையில் அரக்கோணத்திற்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 3 புத்தர் சிற்பங்களைக் காணச் சென்றிருந்தோம். இச்சிற்பங்கள் பற்றி ஆவணம் இதழில் ஒரு செய்தி இடம்பெறுகின்றது. - சுபா
https://archive.org/.../Avanam%202009.../page/212/mode/1up ஆவணம் இதழ் 20 - பக்கம் 212
வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டத்தில் வேலூருக்கு மேற்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் காவனூர் என்றும், மேல்காவனூர் என்றும் அழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூர், இரும்பு காலம் மற்றும் வரலாற்று ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து மக்கள் வசித்து வரும் பகுதியாகும். இவ்வூரில் சில புத்த சமயச் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அக்காலத்தில் புத்தசமயம் தழைத்தோங்கியிருந்த காஞ்சிபுரம் மாநகருக்கு மேற்கே அமைந்துள்ள வேலூர் மாவட்டத்திலும் புத்தசமயம் பரவியிருந்தமையை அம்மாவட்டத்தின் சில இடங்களிலிருந்து கிடைத்த புத்தசமயச் சான்றுகளின் மூலம் அறியலாம். அரக்கோணம் வட்டத்தில் திருமால்பூர் ரயில் நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள பள்ளூரில் கி.பி. 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மூன்று புத்தர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும், புத்தமேடு என்றழைக்கப்படும் பழங்கால வசிப்பிடப் பகுதியும் இவ்வூரில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். வாலாஜாப்பேட்டை நகரத்திற்கு தெற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருமலைச் சேரியில் புத்தசமயத்தைச் சேர்ந்த தேரர்கள் வாழ்ந்ததாகவும் வரலாற்று குறிப்புகள் உள்ளன.
Tuesday, September 10, 2024
நாகப்பட்டினம் அகழாய்வுகளில் கிடைத்த வெண்கல பௌத்த சிற்பங்கள்
முனைவர் க.சுபாஷிணி
லியோன்பெர்க், ஜெர்மனி
பிரித்தானியர் ஆட்சிகாலத்தில் தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கிடைக்கப்பட்ட புத்த சமய சிற்பங்கள் மற்றும் சின்னங்கள் பற்றிய தகவல்கள் அப்போதைய அரசு ஆவணங்களில் பதியப்பட்டன. முன்னர் மெட்ராஸ் அருங்காட்சியத்தின் இயக்குநராகப் பொருப்பேற்றிருந்த திரு.டி.என்.ராமச்சந்திரன் தொகுத்து எழுதிய அகழாய்வு அறிக்கைகளில் முக்கியமான ஒன்று அவரது நாகப்பட்டின அகழாய்வுச் செய்திகளைத் தாங்கி எழுதப்பட்ட ஒரு நூல். The Nagapattinam and other Buddhist Bronzes என்ற தலைப்பைக் கொண்ட இந்த நூல் முதன் முதலில் 1954ஆம் ஆண்டு மெட்ராஸ் அருங்காட்சியத்தின் வெளியீடாக வந்தது. பின்னர் இந்நூல்1965,1992, 2005ஆம் ஆண்டுகளில் மறுபதிப்பு கண்டது. இந்த நூலின் தனிச்சிறப்பு - நாகப்பட்டினத்தில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட வெண்கல புத்தர் திருமேனிகளும் ஏனைய புத்த சின்னங்களும் பற்றிய விரிவான் பட்டியலை இது கொண்டிருக்கின்றது என்பதே.
இந்திய துணைக்கண்ட நிலப்பகுதியில் வெண்கல சிற்பங்களில் பழமையானது எனும் போது சிந்துவெளி அகழாய்வுக்களமான மொஹஞ்சதாரோவில் இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் வெண்கல சிலையைக் குறிப்பிடலாம். இச்சிலை ”நடனப் பெண்” என அழைக்கப்படுகிறது. ”நடனப் பெண்” என அழைக்கப்பட்டாலும் மனதில் உறுதியோடு கம்பீரமாக நிற்கின்ற ஒரு பெண்ணின் சிற்பமாகவே இது வடிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம்.
பாடலிபுத்திராவில் மாமன்னர் அசோகனின் முன்னிலையில் நிகழ்ந்த மூன்றாவது மிகப்பெரிய புத்த மாநாட்டில் மோகிலிபுத்த திசா (Moggaliputta Tissa) தலைமையில் புத்த பிக்குகள் கலந்து கொண்டார்கள். அதன் அடிப்படையில் அங்கிருந்து புத்தபிக்குகள் இந்திரபிரஸ்தம் (டெல்லி) முதல் தமிழ்நாடு வரையிலும் மட்டுமின்றி இலங்கைக்கும் பௌத்த நெறிகளைப் பரவலாக்க அனுப்பி வைக்கப்பட்டார்கள். இது பௌத்த சமயம் இந்தியா முழுமைக்கும் மற்றும் கிழக்காசிய நாடுகளில் விரிவாக்கம் காண அடிப்படையை உருவாக்கியது. அது தொடக்கம், பௌத்த சின்னங்களும் வழிபாட்டுத் தலங்களும், சிற்பக் கூடங்களும் இந்தியாவின் பல பகுதிகளில் வளர்ச்சி காணத் தொடங்கின. இது தமிழ்நிலப்பகுதியிலும் நிகழ்ந்தது.
இந்திய சிற்பங்களை ஆழ்ந்து ஆராயும் போது அவற்றுள் பெரும்பாலானவை இறை வடிவங்களாக இருப்பதைக் காண்கிறோம். சமயச் சார்புடன் கூடிய வகையிலான கடவுள் வடிவங்கள் வெண்கலத்தை கொண்டு உருவாக்கப்பட்டன. மொகஞ்சதாரோ அகழாய்வுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நடனப் பெண் சிற்பம் போல பொதுவான மனிதர்களைப் பற்றிய சிலைகள் என்பவை மிக மிகக் குறைவாகவோ, அரிதாகவோ தான் இதுவரை கிடைத்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியத் துணை கண்டத்தை எடுத்துக் கொண்டால் சிற்பக்கலைக்கு பௌத்த மதம் ஆற்றிய கொடை மிகப் பெரிது. ஆரம்பகால பௌத்த சமய சிற்ப வடிவங்களின் தாக்கத்தைப் பிற்காலத்தில் இந்தியாவில் உருவாக்கம் கண்ட அல்லது வழக்கில் இருந்த எல்லா சமயங்களிலும் காண முடிகின்றது.
எடுத்துக்காட்டாக கிபி 2ஆம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்த மத்திய இந்தியாவின் அமராவதி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட சிற்பங்களைக் கூறலாம். மாறுபட்ட பல்வேறு வடிவங்களிலான புத்தரின் சிற்ப வடிவங்கள் இக்காலகட்டத்தில் இங்கு உருவாக்கப்பட்டன. முதலாம், இரண்டாம் நூற்றாண்டு காலவாக்கில் தட்சசீலம் பகுதியில் வடிக்கப்பட்ட சிற்பப் படைப்புகளில் சிறிய அளவிலான வெண்கல வடிவங்களைக் காண்கின்றோம்.
வரலாற்று முக்கியத்துவம் பெறுகின்ற வகையிலான சிற்பக்கலை பள்ளிகள் இயங்கிய ஒரு பகுதியாக மதுராவை வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றார்கள். கி.பி 1ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு முற்பட்ட காலவாக்கில் கலைத்திறன் மிக்க சிற்பிகள் அழகிய வெண்கல வடிவங்களிலான பெண் உருவம் மற்றும் இயற்கை வடிவங்களை வடித்திருக்கின்றார்கள். இப்படி இந்தியாவின் வடபகுதியில் உள்ள சில இடங்களைக் குறிப்பிடலாம்.
இன்று நமக்குக் கிடைத்திருக்கின்ற வெண்கல சிற்பங்களில் பௌத்த மதம் சார்ந்த வெண்கல சிற்பங்கள் தென்னிந்தியாவில் கிடைக்கின்றன என்றாலும் கூட அப்படி கிடைக்கின்ற சிலைகள் பெரும்பாலானவை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இவை கிபி 11லிருந்து 15ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தவை என்பதும் அவற்றில் பெரும்பாலானவை நாகப்பட்டினத்தைச் சார்ந்தவை என்பதையும் தமிழக அரசின் தொல்லியல் அறிக்கை வழி காண்கின்றோம்.
இன்று சென்னை அருங்காட்சியகம் என அழைக்கப்படும் மெட்ராஸ் அருங்காட்சியத்தின் முன்னாள் இயக்குனர் திரு.டி என் ராமச்சந்திரன் அவர்கள் இந்தியாவில் 1856 முதல் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் ஏறக்குறைய 850 புத்தரின் வெண்கல சிலைகள் கிடைத்ததாகவும் அவை மகாயான வகையைச் சேர்ந்தவை என்றும், சில எழுத்துப் பொறிப்புகளுடன் அவற்றுள் சில உள்ளன என்றும், சில பௌத்த பள்ளிகள் இருந்த பகுதிகளில் இவை இருந்தவை என்றும் குறிப்பிடுகிறார்.
ஸ்ரீவிஜயப் பேரரசு ஆட்சி செய்த இன்றைய இந்தோனேசியாவில் கிபி 5 முதல் பௌத்தம் மிகச் செழித்து ஓங்கி வளர்ந்திருந்ததைக் காண்கிறோம். சைலேந்திர பரம்பரையைச் சேர்ந்த ஸ்ரீவிஜயப் பேரரசு மன்னர்கள் ஆட்சி செய்த அக்காலகட்டத்தில் அவர்களது சோழமண்டலக் கடற்கரை வணிகமும் அதனால் ஏற்பட்டிருந்த நல்லுறவும் நீடித்திருந்தது. குறிப்பாகச் சோழ மன்னன் முதலாம் ராஜராஜன் காலம் இரு பேரரசுகளுக்கும் இடையிலான செழிப்பான வணிகத்தை காலத்தில் இவ்வுறவு நன்கு தொடர்ந்தாலும் 1017, 1025 ஆகிய காலகட்டங்களில் சோழ மன்னர்களின் படையெடுப்பு இரு நாடுகளுக்குமான உறவை பாதிப்புறச் செய்தது என்பதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஆயினும் கூட இக்காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவை, அதாவது கிபி 871 முதல் கிபி 1150 காலகட்டத்தில் மிக அதிகமான பௌத்த பள்ளிகள் தமிழகத்தின் பல பகுதிகளில் குறிப்பாக நாகப்பட்டினம் பகுதியில் இயங்கியத்தை வரலாறு நமக்குச் சுட்டுகிறது.
நாளந்தா, மதுரா போன்ற புகழ்மிக்க பௌத்த தளங்களில் சிற்பக்கலைக் கூடங்களும், அதில் பணியாற்றிய சிற்பிகளும் வடித்த புத்தரின் வடிவங்கள் மற்றும் புத்தர் கதைகளின் அடிப்படையில் உருவாக்கம் கண்ட சிற்பங்கள் தனித்துவமிக்கவை. அதேபோல, தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் பகுதியில் அகழாய்வுகளில் கிடைத்த ஏராளமான கற்சிலைகளையும், செப்புச் சிலைகளையும் காணும் போது நாகப்பட்டின சிற்பக்கலையும் தனித்துவமிக்க ஒரு கலையாக இருந்திருக்க வேண்டும் என்பது ஐயத்திற்கு இடமின்றி அமைகிறது. அதில் குறிப்பாக நாகப்பட்டின புத்தர் சிலைகளை ஆராயும்போது சோழர்கால சிற்பக் கலை கருணையுடன் கூடிய அமைதி தவழும் வடிவத்துடன் இச்சிலைகள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆழ்ந்த, அமைதியான தியான நிலையில் தியான முத்திரைகளோடு இச்சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
சென்னை அருங்காட்சியகத்தின் மேனாள் இயக்குநர் திரு. டி.என். ராமச்சந்திரன் தனது நூலில் பதிவு செய்திருக்கும் பட்டியலின் அடிப்படையில், 1954ஆம் ஆண்டு சென்னை அருங்காட்சியத்தில், பிரித்தானிய ஆட்சி காலத்தில் குறிப்பாக 1926 மற்றும் 1934 கால வாக்கிலும் மற்றும் இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரும் நாகப்பட்டினத்தில் வெளிப்பாளையம், நாணயக்கார தெரு ஆகிய இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட 86 சிற்பங்கள் அங்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பில் வைக்கப்பட்டன என்ற செய்தி நமக்குக் கிடைக்கின்றது. அப்பட்டியலில் உள்ள 20 சிற்பங்கள் பற்றி சில தகவல்களைக் காண்போம்.
1. பட்டியல் எண் 1: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிலை. இதன் உயரம் 29.3 சென்டிமீட்டர். வலது கை அபய முத்திரை காட்டி நிற்கும் வகையில் இச்சிற்பம் உள்ளது.
2. பட்டியல் எண் 2: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம். அடிப்பகுதியும் முழு உயரமும் மொத்தம் 49 சென்டிமீட்டர்; அடிப்பகுதி இல்லாமல் 34.5 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது. நின்ற நிலை வடிவில் அபயமுத்திரையுடன் இச்சிற்பம் காணப்படுகிறது.
3. பட்டியல் எண் 3: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதியுடன் கூடிய உயரம் 51.2 சென்டிமீட்டர். அடிப்பகுதி நீங்கலாக 38 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. அபய முத்திரையுடன் கூடியுள்ள ஒரு சிற்பம் இது.
4. பட்டியல் எண் 4: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் இதன் உயரம் 52 சென்டிமீட்டர். அடிப்பகுதி இல்லாமல் 35.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது இச்சிற்பம். "உமையர் திருவாலியாழ்வார் நாயகர்" என்ற எழுத்துப் பொறுப்புகளுடன் கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
5. பட்டியல் எண் 5: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் வெளிப்படுத்தப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் இதன் உயரம் 27.2 சென்டிமீட்டர் அடிப்பகுதி நீங்கலாக 23.5 சென்டிமீட்டர் உயரம்.
6. பட்டியல் எண் 6: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 16.5 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 14 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது. நின்ற நிலையில் அபய முத்திரையுடன் இச்சிற்பம் உள்ளது. "தாரயர் மடமுடையான்" என்ற தமிழ் எழுத்துப் பொறிப்புடன் இது அமைந்துள்ளது. ஏறக்குறைய கிபி 1500 என இதனை ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர்.
7. பட்டியல் எண் 7: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதி நுணுக்கமான வகையில் அமைந்துள்ளது. இதன் அடிப்பகுதியுடன் கூடிய வகையிலான உயரம் 10.2 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீக்கமாக 6.3 சென்டிமீட்டர் உயரம்.
8. பட்டியல் எண் 8: நாகப்பட்டினம் நாணயக்கார சாலை பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் இதன் உயரம் 47.5 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 35 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. கிபி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு கால சிற்பம் இது. சிற்பத்தின் அடிப்பகுதியில் "நாயகர்" என்ற சொல் பொறிக்கப்பட்டுள்ளது.
9. பட்டியல் எண் 12: அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 10.5 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி இல்லாமல் 67 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. இது தஞ்சாவூரில் வழிபாட்டில் இருந்த ஒரு புத்தர் சிற்பம். ஏதோ ஒரு வகையில் அங்கிருந்து சென்னை அருங்காட்சியத்திற்குக் கொண்டுவரப்பட்டது.
10. பட்டியல் எண் 19: நாகப்பட்டினம் நாணயக்கார சாலை பகுதியில் 1934 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 73.5 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி நீங்கலாக 58.5 சென்டிமீட்டர் உயரமும் கொண்ட சிற்பம் இது.
11. பட்டியல் எண் 20: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடியவகையில் 23.8 சென்டிமீட்டர் உயரமும் அடிப்பகுதி நீங்கலாக 18 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது இச்சிற்பம். இதன் காலம் கிபி 12 அல்லது 13. இதில் கீழ்க்காணும் எழுத்துப்பொறிப்புகள் உள்ளன.
கா ழு …. ஈ
த்து வி ….து
னண்…. ய ன
பொ த்த … நாய கர்
12. பட்டியல் எண் 22: நாகப்பட்டினம் பகுதியில் இருந்து மெட்ராஸ் அருங்காட்சியத்திற்கு 1910 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 20.8 சென்டிமீட்டர் உயரமும், அடிப்பகுதி நீங்கலாக 17.7 சென்டிமீட்டர் உயரமும் கொண்டது. இதன் அடிப்பகுதியில் "அரைசர்" என்ற எழுத்துப் பொறிப்பு உள்ளது.
13. பட்டியல் எண் 24: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இச்சிற்பம் அமர்ந்த நிலையில் வலது கர விரல்கள் தரைப்பகுதியைத் தொடுகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிபி 13 அல்லது 14 ஆம் நூற்றாண்டு சிற்பம் என அறியப்படுகின்ற இச்சிற்பத்தின் அடிப்பகுதியில் "நத்தன் கூடிய வந்தாள் நாயகர்" என்ற எழுத்துப் பொறிப்பு உள்ளது.
14. பட்டியல் எண் 28: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அமர்ந்த நிலையில் உள்ள இந்தச் சிற்பத்தில் அடிப்பகுதியுடன் கூடிய உயரம் 20 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 11 சென்டிமீட்டர் உயரம் கொண்டது இச்சிற்பம். இதன் காலம் 15ஆம் நூற்றாண்டு என அறியப்படுகிறது. "உடையார்" என்ற சொல் இதில் கீழ்ப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளது.
15. பட்டியல் எண் 30: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. இதன் முகப்பகுதி சிதைக்கப்பட்ட நிலையில் உள்ளது. முக்கோண பத்மாசன வடிவில் அமர்ந்த நிலையில் இருப்பது போல் அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் அடிப்பகுதியும் மேற்பகுதியு கூடிய வகையில் 10.5 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 8 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சிற்பம் இது.
16. பட்டியல் எண் 32: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் 15 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 12 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. அமர்ந்த நிலையில் உள்ள சிலை இது. இச்சிற்பம் இந்தோனேசியாவின் பெரும் பௌத்தப்பள்ளியான போரபுதூர் கோயில் புத்தர் சிற்பங்களின் வடிவத்தை ஒத்ததாக அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு.
17. பட்டியல் எண் 37: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. அடிப்பகுதியுடன் கூடிய வகையில் 73 சென்டிமீட்டர் உயரம் கொண்டது; அடிப்பகுதி நீங்கலாக 29.8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. இரண்டு யாழிகள் ஒவ்வொரு பக்கத்திலும் இருப்பது போன்றும் தலைக்கு மேல் அரசருக்கான பீடம் அமைக்கப்பட்டது போன்றும், அரசர்கள் அமரும் சிம்மாசனம் போன்ற பீடமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது. சிறந்த கலைநயத்துடன் உருவாக்கப்பட்ட சிற்பம் இது.
18. பட்டியல் எண் 45: நாகப்பட்டினம் நாணயக்கார சாலையில் 1934ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட நின்ற நிலையில் உள்ள மைத்திரேயரின் சிற்பம் இது. பீடத்தோடு கூடிய வகையில் 29 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. பீடம் நீங்கலாக 21.5 சென்டிமீட்டர் உயரத்துடன் உள்ளது. "திருவுடையார் அம்மை அ களங்கம் பெருமாள்" என்ற சொற்கள் இதன் அடிப்பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. நான்கு கரங்களுடன் நின்ற நிலையில் அமைக்கப்பட்ட அழகிய சிற்பம் இது.
19. பட்டியல் எண் 63: நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் 1926 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட சிற்பம் இது. ஜம்பாலா மற்றும் அவரது பெண்துணை வசுதரா இருவரும் அமர்ந்த நிலையில் இருப்பது போன்று அமைக்கப்பட்ட சிற்பம் இது. இதன் உயரம் அடிப்பகுதியோடு கூடிய வகையில் 10 சென்டிமீட்டர்; அடிப்பகுதி நீங்கலாக 8 சென்டிமீட்டர் உயரம் கொண்டது.
20. பட்டியல் எண் 80: புத்தரின் தலை மட்டுமே இருக்கின்ற வகையில், ஓரளவு சிதையுண்ட வகையில் உள்ள சிற்பம் இது. 9 சென்டிமீட்டர் உயரம் கொண்டது. கிபி 5 அல்லது 6ஆம் நூற்றாண்டு சிற்பம் என அடையாளப்படுத்தப்படுகிறது. சிற்பத்தின் நெற்றிப் பகுதியும் கண்களும் தங்கத் தகடுகளால் அலங்கரிக்கப்பட்ட வகையில் அமைக்கப்பட்ட சிற்பம் இது. ஆயினும் தங்கத் தகடுகள் நீக்கப்பட்ட நிலையிலேயே இச்சிற்பம் கிடைத்துள்ளது.
நாகப்பட்டினத்தில் 1856 முதல் அகழாய்வுப் பணிகளின் போதும் வேறு வகையிலும் சேகரிக்கப்பட்ட 86 வெண்கல புத்தர் சிற்பங்களில் 20 சிற்பங்கள் பற்றிய விபரங்கள் மட்டுமே மேற்காணும் பட்டியலில் வழங்கப்பட்டுள்ளன. இந்த 86 சிற்பங்களும் அக்காலகட்டத்தில் இன்றைய சென்னை அருங்காட்சியகத்திற்குக் கொண்டு வரப்பட்டன, அங்கு பாதுகாக்கப்பட்டன என்று அச்செய்திகளை ஆய்ந்து தொகுத்து The Nagapattinam and other Buddhist Bronzes நூலில் வழங்கியிருக்கின்றார் திரு.டி.என் ராமச்சந்திரன். அவர் 1954ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த அரிய நூல் தருகின்ற செய்திகளின் அடிப்படையில் இன்றைய சென்னை அருங்காட்சியகத்தின் அரும்பொருட்களின் பட்டியலை ஆய்வு செய்து பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த ஆய்வின் வழி இச்சிற்பங்கள் அனைத்தையும் ஒன்றாக இதே அருங்காட்சியகத்தில் ஒரு சிறப்புப் பகுதியில், ”நாகப்பட்டின வெண்கல புத்தர் சிற்பங்களுக்கான கண்காட்சி” ஒன்றை உருவாக்க தமிழக அரசின் அருங்காட்சியகப் பிரிவை அனுபுகது அவசியம். இப்பணியைத் தொடங்குவதன் வழி மறைந்துபோன நாகப்பட்டினத்தின் பௌத்த சிறப்புகள் மீண்டெழவும், அதே வேளை பௌத்த மதத்தை அரசமதமாகக் கொண்டிருக்கின்ற பெரும்பாலான கிழக்காசிய தூரக்கிழக்காசிய நாடுகளுடனான தமிழ்நாட்டின் சுற்றுலா துறையையும் வளர்க்க இது உதவும். அதன் வழி நட்புறவு வலுப்பெறவும் இது வாய்ப்பளிக்கும்.
குறிப்பு: The Nagapattinam and other Buddhist Bronzes நூலில் மேலும், இன்று தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள, நாகப்பட்டினத்தில் கிடைத்த 186 பௌத்த சின்னங்களைப் பற்றிய தகவல்களையும் தனது நூலில் வழங்கியுள்ளார். இது மீளாய்விற்கு தேடுதலுக்கும் உட்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
Saturday, September 7, 2024
பள்ளூர் புத்தர் திருக்கோயில். இந்தப் பகுதியில் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன் கண்டெடுக்கப்பட்ட புத்தர் சிற்பங்கள் இங்கு பொது மக்களால் சிறிய கோயிலாக எழுப்பப்பட்டு வழிபடப்பட்டு வந்தது. இந்த புத்தர் திருக்கோயிலை மேலும் வழிபாட்டினை முன்னெடுக்க தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இங்குள்ள மூன்று சிற்பங்களும் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டு பழமையானவை. இவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஆய்வு செய்து சிற்பங்களின் தன்மை அவ
ற்றின் காலம் ஆகியவற்றை கண்டறியும் வகையில் இன்று கல்வெட்டியல் அறிஞர் முனைவர் பத்மாவதி மற்றும் ஆய்வாளர் முனைவர் சசிகலா நான் மூவரும் சென்றிருந்தோம்.
ஏறக்குறைய 9 ஆம் நூற்றாண்டு திருவருவங்கள் இவை. சிறிதளவு சிதைக்கப்பட்ட நிலையில் சிற்பங்கள் இருந்தாலும் பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்ட சிறப்புடன் இவை திகழ்கின்றன. பண்டைய வணிகப் பெருவழி பகுதியில் அமைந்திருக்கும் இப்பகுதி பௌத்த மதம் செழித்துப் பரவிய நகரங்களில் ஒன்றாக இணைந்திருக்க கூடிய வாய்ப்புகள் உண்டு.
-சுபா